கர்நாடக மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு தமிழக நீதிபதி முருகேசன் பெயர் பரிந்துரை
கர்நாடக மனித உரிமை ஆணையத் தலைவராக இருந்த நீதிபதி எஸ்.ஆர்.நாயக் ஓய்வு பெற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஆணையத் தலைவரைத் தேர்வு செய்வதற்கானக் கூட்டம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நீதிபதிகள் டி.முருகேசன், ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனிடையே, நீதிபதி ரவீந்திரன் பொறுப்பேற்க விரும்பாததால், மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக டி.முருகேசன் பெயரைத் தேர்வு செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அரசு அனுப்பியது.
தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டி கிராமத்தில் 1951, ஜூன் 10-இல் பிறந்த முருகேசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். 2000-இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், தனது பதவிக் காலத்தில் 1.30 லட்சம் வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சில மாதங்கள் பணியாற்றிய முருகேசன், கடந்த ஜூன் 9-இல் பணி ஓய்வு பெற்றார். அதன்பிறகு, தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், அடுத்த வாரம் கர்நாடக மனித உரிமை ஆணையத் தலைவராக முருகேசன் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது