வன்முறைகள்: முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- மமதாவுக்கு 53 முஸ்லிம் கல்வியாளர்கள் கடிதம்
Recommended Video
கொல்கத்தா: வன்முறைகளில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அம்மாநிலத்தின் முஸ்லிம் பிரமுகர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக மட்டுமே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 82 வயது சயீத் என்ற முதியவர் மரணமடைந்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் என்.ஆர்.எஸ். மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவர்கள், பணியாளர்களை கொடூரமாகத் தாக்கினர். இதனால்தான் நாடு தழுவிய அளவு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உஷோஷி விவகாரம்
அதேபோல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற உஷோஷி சென்குப்தா நண்பருடன் உபேர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரது வாகனத்தை வழிமறித்து ஓட்டுரை கடுமையாக தாக்கியது.
அதிரடி கைது
மேலும் தாங்கள் பாதிக்கப்பட்ட போது அருகில் இருந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசாரும் உதவிக்கு வரவில்லை என சமூக வலைதளங்களில் உஷோஷி சென்குப்தா பதிவிட்டிருந்தார். இதுவும் சர்ச்சையானது. இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உஷோஷி குறிப்பிட்ட காவல்நிலைய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் கல்வியாளர்கள் கடிதம்
இந்நிலையில் இந்த இரு சம்பவங்களிலும் முஸ்லிம்களே தொடர்புடையவர்கள்; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என கொல்கத்தாவைச் சேர்ந்த முஸ்லிம் கல்வியாளர்கள் இம்ரான் ஜாகி, மமூம் அக்தர், சமூக செயற்பாட்டாளர் முதார் பதேர்யா உள்ளிட்ட 53 பிரமுகர்கள், மமதா பானர்ஜிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், அண்மைய இரு வன்முறை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்- முஸ்லிம்கள்.
தேவை கடும் நடவடிக்கை
இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டுகிறோம். இதில் மட்டுமல்ல முஸ்லிம்கள் எந்த ஒரு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பாதுகாக்கப்படுவோம் என சிந்தனை வராது
முஸ்லிம்கள் என்பதற்காகவே குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள் என்கிற எண்ணம் வளர்ந்துவிடக் கூடாது. இப்படியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் நாம் தவறு செய்தாலும் காப்பாற்றப்படுவோம் என்கிற நம்பிக்கை முஸ்லிம்களிடத்தில் வளராமல் இருக்கும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மைகாலங்களில் முஸ்லிம்கள் பிரமுகர்கள் இப்படியான ஒரு கடிதத்தை எந்த அரசுக்கும் எழுதியதில்லை என கூறப்படுகிறது. தங்களை பாதுகாக்கும் மேற்கு வங்க அரசுக்கு ஆபத்து என்பதால் முஸ்லிம் பிரமுகர்கள் தாங்களாகவே முன்வந்து இக்கடிதத்தை எழுதியிருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. இது சட்டம் ஒழுங்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக சித்தரிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தை காப்பாற்றுமா? என்பது விவாதத்துக்குரியது.