ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவருடன் முஸ்லிம் உலமாக்கள் சந்திப்பு! 6 கேள்விகளுக்கு பதில் கோரினர்!!
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷை சன்னி உலமா கவுன்சில் பொதுச் செயலாளர் முகமது சலீஸ் தலைமையிலான முஸ்லிம் உலமாக்கள் சந்தித்துப் பேசினர். அப்போது இந்திரேஷிடம், இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக மாற்றும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறதா? என்பது உள்ளிட்ட 6 கேள்விகளை அவர்கள் எழுப்பினர்.
இதுகுறித்து கான்பூரில் சன்னி உலேமா கவுன்சில் பொதுச் செயலாளர் முகமது சலீஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவரும், அந்த அமைப்பில் சிறுபான்மையினர் விவகாரங்களை கவனித்து வருபவருமான இந்திரேஷை திங்கள்கிழமை இரவு சந்தித்தோம். அப்போது அவரிடம் இந்தியாவை ஹிந்து நாடாக ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக மாற்றும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறதா? ஹிந்து ராஷ்டிரம் என்பதை ஹிந்து மதத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துகிறதா? அல்லது இதற்காக தனியான வரையறையை ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்தியுள்ளதா?
மத மாற்ற விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்ய விரும்புகிறது? முஸ்லிம்களிடம் இருந்து எதுபோன்ற தேசபக்தியை ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்க்கிறது? இஸ்லாம் மதத்தை ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு பார்க்கிறது? ஆகிய 6 கேள்விகளை கேட்டோம்.
ஹிந்து கோட்பாட்டுப்படி, இந்தியா ஹிந்து ராஷ்டிரமாக மாற்றப்பட்டால், தலித்துகள் மீண்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அரசியலமைப்பு சட்டத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது மதமாற்றம் தொடர்பாக மசோதா கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். ஏன் அச்சப்படுகிறது? மசோதாவைக் கண்டு நாங்கள் அச்சப்படவில்லை. முஸ்லிம் மதத்தை விரும்பாதவர்கள், விலகலாம். யாரையும் கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்தில் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
இந்தியா மீதுள்ள பற்றினால்தான், 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜின்னாவையும், பாகிஸ்தானையும் எங்களது மூதாதையர்கள் நிராகரித்தனர். காந்தியின் பாதையை அவர்கள் தேர்வு செய்தனர். இந்தியா எங்களது நாடு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.
மதம் என்பது நமது தனிப்பட்ட விவகாரமாகும். அது, நாடு சம்பந்தப்பட்டது அல்ல. அதனால்தான் அனைத்து இந்திய மஸ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமின் அமைப்பு தலைவர் ஒவாஸின் அறிவிப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை.
இவ்வாறு சலீஸ் கூறினார்.