குடியுரிமை சட்ட போராட்டம்.. கிராமத்தை சூறையாடிய உ.பி. போலீஸ்- முஸ்லிம்கள் ஊரைவிட்டு வெளியேறினர்
பிஜ்னோர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியதால் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் அருகே ஒரு கிராமத்தையே போலீசார் சூறையாடி உள்ளனர். போலீசாரின் சித்ரவதைகளுக்கு அஞ்சி முஸ்லிம் குடும்பங்கள் ஊரையே காலி செய்திருக்கின்றன.
பிஜ்னோர் அருகே நேதார் என்ற கிராமத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
முகமது சுலைமான் என்ற கல்லூரி மாணவர், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்தான் பலியானார் என உத்தரப்பிரதேச போலீசார் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேதார் கிராமத்துக்குள் நுழைந்த போலீஸ் படை ஒட்டுமொத்தமாக அனைத்து வீடுகளையும் சூறையாடி இருக்கிறது.
வீடுகளில் இருந்த பொருட்களை உடைத்து நாசப்படுத்தியுள்ள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளது போலீஸ்.
மேலும் 60 பேர் பெயர்களையும் எப்.ஐ.ஆரில் சேர்த்திருக்கிறது. அடையாளம் தெரியாத 3,000 பேர் ஒன்று திரண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆண்களை கைது செய்ய வந்திருப்பதாக கூறி பெண்களையும் குழந்தைகளையும் போலீசார் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் நேதார் கிராமத்தைவிட்டே பல முஸ்லிம் குடும்பங்கள் வெளியேறி உள்ளன.
மேலும் போலீசாருக்கு எதிராக ஊடகங்களில் பேட்டி கொடுத்தால் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேதார் கிராமமே பெரும் அச்சத்தில் உறைந்துகிடக்கிறது.