பீகார்: சிறுவனின் உயிரை காக்க ரமலான் நோன்பை கைவிட்ட "மனிதநேய" இஸ்லாமியர்
பீகாரில் சிறுவனின் உயிரை காக்க ரமலான் நோன்பை இஸ்லாமியர் ஒருவர் கைவிட்டார்.
Recommended Video
பாட்னா: பீகாரில் தலசீமியா நோயால் அவதிப்பட்ட சிறுவனின் உயிரை காக்க இஸ்லாமியர் ஒருவர் அம்மதத்தினர் புனிதமாக கருதப்படும் ரமலான் நோன்பை கைவிட்டார்.
கோபால்கஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (8). இவர் உடல் சோர்வாலும் சுகமின்மையாலும் சாதர் மருத்துவமனைக்கு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது ராஜேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தலசீமியா என்ற நோய் உள்ளதாக கூறினர். இந்த நோய் ரத்தத்தில் ஹீமோகுளோபின் வளர்ச்சி அசாதாரணமாக உற்பத்தியாகும் போது ஏற்படும் ரத்த குறைபாடு நோயாகும். இதற்காக நோயாளி 3-4 வாரத்துக்கு ஒரு முறை ரத்தத்தை மாற்ற வேண்டும்.
ரத்தம் கிடைக்க ஏற்பாடு
தனக்கு தெரிந்த பெரும்பாலான ரத்த வங்கிகளில் ராஜேஷின் தந்தை ரத்தம் கேட்டார். ஆனால் சிறுவனின் ரத்தம் அரிய வகை என்பதால் அது கிடைக்கவில்லை. வேண்டுமானாலும் 2 அல்லது 3 நாட்களில் அந்த வகை ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தனர்.
மகனை காப்பாற்ற
சிறுவனின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால் ஓரிரு நாள் தாமதித்தால் கூட சிறுவனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படும் நிலை இருந்தது. இதையடுத்து மருத்துமனையிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ள குச்சாய்கோட் ரத்த வங்கிக்கும் சென்ற ராஜேஷின் தந்தை ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் மகனை காப்பாற்றி விடலாம் என்று கொஞ்ட நஞ்ச நம்பிக்கையும் குறைந்துவிட்டது.
ஜாவீத் ஆலம்
இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர், மாவட்ட ரத்த தானக் குழுவின் உறுப்பினரான அன்வர் ஹூசைனுக்கு ராஜேஷின் நிலை குறித்து எடுத்துரைத்தார். அப்போது அன்வர் சிறிதும் தாமதிக்காமல் சிறுவனின் ரத்த வகையை உடையை தனது ரத்ததான குழுவின் மற்றொரு உறுப்பினராக ஜாவீத் ஆலமிடம் கேட்டார்.
முறிந்துவிடும்
முஸ்லிம்களுக்கு ரமலான் நோன்பு மிகவும் முக்கியமானதாகும். தங்கள் வாழ்வில் 5 முறை தொழுகையையும், ரமலான் நோன்பு இருப்பதையும் வாழ்நாள் கடமையாகவே கருதுகின்றனர். ரமலான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களின் ரத்தம் சிந்துவதோ வெளியேறுவதோ கூடாது. அப்படி செய்தால் நோன்பு முறிந்துவிடும் என்பதால் ஜாவீத் ஆலம் யோசித்தார்.
நோன்பை கைவிட்டார்
எனினும் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது நோன்பை கைவிட்டுவிட்டு சிறிது உணவு எடுத்துக் கொண்டால் மட்டுமே அவரது ரத்தத்தை எடுப்போம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் நோன்பை கைவிட்டார். சிறுவனுக்கு ரத்தம் கொடுத்தார். இதனால் சிறுவன் உயிர் பிழைத்தார். இதுகுறித்து ஜாவீத் ஆலம் கூறுகையில் நோன்பை விட மனிதநேயமே முக்கியம் என்று எங்கள் மதம் கூறுகிறது. அதனால் நோன்பை கைவிட்டதற்கு நான் வருந்தவில்லை என்றார்.