முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர முடிவு: முஸ்லீம் லீக் அறிவிப்பு
முத்தலாக் அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றஞ்சாட்டியுள்ள முஸ்லீம் லீக் கட்சி, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
கொச்சி: முத்தலாக் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அகில இந்திய முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது.
கொச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் குஞ்ஞாலி குட்டி, குடும்ப பிரச்சனையை கிரிமினல் குற்றமாக மாற்றுவது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டினார். முத்தலாக் குற்றம் புரிந்த முஸ்லீம் ஆணை 3 ஆண்டுகள் சிறையில் அடைத்தால் அவரது மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முத்தலாக் மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விடுப்பட்டிருப்பதாகவும் அடிப்படைக் கேள்விகள் பலவற்றிற்கு மசோதாவில் பதிலில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
முஸ்லீம் தனிநபர் சட்டத்தை அழித்து பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி இது என்று கூறியுள்ள பி.கே.குஞ்ஞாலி குட்டி, முத்தலாக் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறினால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.