பூமி பூஜை...ராமரின் தாய் கவுசல்யா பிறந்த மண்ணை சுமந்து...800 கி.மீ. நடந்தே செல்லும் இஸ்லாமியர்
அயோத்தி: அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சுமார் 800 கி. மீட்டர் தூரம் நடந்தே செல்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சந்த்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மொஹம்மது ஃபைஸ் கான். சந்த்குரி கிராமத்தில்தான் கடவுள் ராமரின் தாய் கவுசல்யா பிறந்ததாக இதிகாசங்களில் கூறப்பட்டு இருக்கிறது. இதைக் குறிக்கும் வகையிலும், அந்த கிராமத்தின் மணலையும் எடுத்துக் கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இவர் மேற்கொள்ளும் நீண்ட நடை பயணம் முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோல் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இதற்கு முன்பு 15,000 கி. மீட்டர் தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டு பல்வேறு கோயில்களுக்கு சென்றுள்ளார். நடைபயணத்தின்போது பல்வேறு கோயில்களில் தங்கிச் சென்றுள்ளார். அப்போது எல்லாம் யாரும் தன்னை எதுவும் கூறியதில்லை என்கிறார் மொஹம்மது.
ஏற்கனவே நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கும் மொஹம்மது, தற்போது மத்தியப்பிரதேசத்தில் அனுப்பூர் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறார். அயோத்தியில் பூமி பூஜை செய்யும்போது அவர் எடுத்துச் செல்லும் சந்த்குரி கிராமத்தின் மணல் அந்த இடத்தில் போடப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மேலும் மொஹம்மது கூறுகையில், ''எனது முன்னோர் இந்துக்கள். நான் மதத்தால், பெயரால் முஸ்லிம் ஆக இருந்தாலும்,மனதால் ராமர் பக்தராக இருந்து வருகிறேன். என்னுடைய மூதாதையர்களின் மூல வேரை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இந்துக்களாக இருப்பார்கள். அவர்களது பெயர் ராம்லால் அல்லது ஷ்யாம்லால் ஆக இருக்கும். நாம் கிறிஸ்துவ ஆலயங்களுக்கு சென்றாலும், மசூதிக்கு சென்றாலும், பிறப்பால் இந்துக்களாகத்தான் இருந்து இருப்போம்.
நம்முடைய முக்கிய மூதாதையர் கடவுள் ராமர். ஒருவருக்கு சரியான பார்வை இருக்குமானால், இந்தியாவின் அதிபதி ராமர் என்றுதான் கருத வேண்டும் என்று பாகிஸ்தான் தேசிய கவிஞர் அல்லாமா இக்பால் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில்தான், நான் சந்த்குரியில் இருந்து மணல் எடுத்துக் கொண்டு அயோத்தி சென்று கொண்டு இருக்கிறேன்'' என்கிறார்.
ராஜஸ்தானில் திடீர் திருப்பம்- சட்டசபையை கூட்ட அழைப்பு விடுத்தார் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேதரா டிரஸ்ட் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. அடிக்கல் நாட்டும்போது ஐந்து வெள்ளி செங்கற்கள் அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. ஐந்து கிரகங்களை குறிக்கும் வகையில் இந்த செங்கற்கள் வைக்கப்படுகிறது. மேலும், கோயிலின் வரலாறும் தாமிரத் தட்டில் வைக்கப்படும் என்று இன்று கூறப்பட்டுள்ளது. பின்னாட்களில் இந்தக் கோயில் குறிந்து எந்த சர்ச்சைகளும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் அவ்வாறு செய்யப்படுகிறது என்று ட்ரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.