15 வருடங்களாக தினமும் கோசாலை பசுக்களுக்கு சப்பாத்தி சேகரிக்கும் 60 வயது இஸ்லாமியர்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக மக்களிடம் சப்பாத்தி சேகரித்து அவற்றை பசுக்களுக்கு வழங்கி வருவதை சேவையாகச் செய்து வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் வசித்து வருகிறார் ஹாஜி மெஹ்ருதீன் (60). இவர் தினமும் காலை 6 மணிக்கு ஒரு தள்ளுவண்டியில் நான்கு கோணிப்பைகளுடன் கிளம்பி விடுகிறார். வீடு வீடாகச் சென்று சப்பாத்திக்களை சேகரிப்பது அவரது பணி. இவ்வாறு மதியம் 1 மணி வரை அவர் சப்பாத்தி சேகரிக்கிறார்.
பின்னர் அந்த சப்பாத்திக்களை அங்குள்ள கோசாலையில் உள்ள பசுக்களுக்கு உணவாகத் தருகிறார். இந்தச் சேவையை இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்.
ஜெய்சால்மர் முழுவதும் ஒரே நாளில் சப்பாத்தி சேகரிப்பது கடினம் என்பதால், வாரத்தின் ஒவ் வொரு நாளும் ஒரு பகுதி என பிரித்துக்கொண்டு நகரம் முழுவதும் செல்கிறார் மெஹ்ருதீன்.
பசுக்களுக்கு உணவளிப்பதன் மூலம் தனக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டுவதாக கூறுகிறார் அவர். மேலும், ‘வன்முறையில் ஈடுபடுமாறு எந்த மதமும் போதிக்கவில்லை. அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை, சகோதரத்துவம் ஆகியவற்றையே ஒவ்வொரு மதமும் போதிக்கிறது" என்கிறார் மெஹ்ருதீன்.