இந்து நண்பனின் இறுதிச் சடங்கை தானே செய்த இஸ்லாமியர்: குவியும் பாராட்டுக்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியான தனது இந்து மத நண்பனின் இறுதிச் சடங்கை தனி ஆளாக நின்று செய்துள்ளார் ஒரு இஸ்லாமியர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வருபவர் ரசாக் கான் திகாரி. அவரது நண்பர் சந்தோஷ் சிங். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பைதுலில் மனைவி சாயா மற்றும் 8 வயது மகளுடன் வசித்து வந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சந்தோஷ் கடந்த 20ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்ய பணம் இல்லாமல் சாயா திண்டாடினார். இந்நிலையில் நண்பன் இறந்த செய்தி அறிந்து ரசாக் பைதுல் வந்தார்.
சாயா படும் அவதியை பார்த்த அவர் நட்புக்கு இடையே மதம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி சந்தோஷின் இறுதிச் சடங்குகளை தானே செய்வதாக தெரிவித்தார். அவர் இந்து மத முறைப்படி சந்தோஷ் சிங்கின் இறுதிச் சடங்குகளை செய்தார்.
இடுகாட்டில் துண்டு கட்டி தோளில் குடத்தை வைத்து சந்தோஷின் உடலை சுற்றி வந்து அவரின் மகளின் துணையோடு சிதைக்கு தீ மூட்டினார். ஒரு இஸ்லாமியராக இருந்தும் அவர் இந்து முறைப்படி சடங்குகள் செய்ததை பார்த்து பலரும் ரசாக்கை பாராட்டியுள்ளனர்.