உ.பி.யில் முஸ்லீம் திருமண அழைப்பிதழில் அதிர்ச்சி.. சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றிய தருணம்!
மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மகள் திருமண அழைப்பிதழில் ராதே கிருஷ்ணா மற்றும் விநாயகரின் படங்களை அச்சடித்து அசத்தியுள்ளார் முஸ்லீம் பெரியவர் ஒருவர்.
இந்தியாவில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருவதால் இது பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது.
என்னதான் இருந்தாலும் திருமணம், இல்ல விசேஷங்கள் என வரும்போது அழைப்பிதழ்களில் தங்கள் சமூகம் சார்ந்த கடவுளின் புகைப்படமோ இல்லை குறியீடுகளையோ போடுவதுதான் வழக்கம்.
அழைப்பிதழ்கள்
ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு முஸ்லீம் வீட்டு திருமண அழைப்பிதழில் விநாயகர் மற்றும் ராதே கிருஷ்ணாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மீரட்டில் ஹஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சராஃபத். இவரது மகள் ஆஸ்மா காட்டூன். இவருக்கு வரும் 4-ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ்களை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம்.
அழைப்பிதழ்
முஸ்லீம் வீட்டு திருமண அழைப்பிதழில் ராதே கிருஷ்ணா, விநாயகர் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து முகமது சராஃபத் கூறுகையில் இந்து- முஸ்லீம் ஒற்றுமையை காட்டுவதற்கு இது நல்ல ஐடியாவாக இருக்கும் என நினைத்தேன். தற்போது மத ரீதியாக ஏராளமான பிரச்சினைகள் எழுந்து வரும் சூழலில் இது போன்று ஒரு அழைப்பிதழை அச்சிடலாம் என நினைத்தேன்.
முஸ்லீம்
எனது முயற்சிக்கு எனது நண்பர்களும் பாராட்டினர். இந்தி, உருது ஆகிய இரு மொழிகளில் கார்டுகளை பிரிண்ட் செய்துள்ளேன். எனது உறவினர்கள் பெரும்பாலானோருக்கு இந்தி தெரியாது என்பதற்காக இந்த ஏற்பாடு என அவர் தெரிவித்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் முஸ்லீம் பெண்கள் சேர்ந்து போராட்டக் களத்திலேயே இந்து பெண்ணுக்கு வளைகாப்பை நடத்தி வைத்தனர்.
திருமணம்
அப்போது அந்த வளைகாப்புக்கு வழங்கப்பட்ட தாம்பூலத்தில் இஸ்லாமியர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே என குறிப்பிடப்பட்டிருந்தது. இது போல் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு ஏராளமான உதாரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது போல் கேரளாவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இந்து பெண்ணுக்கு மசூதியில் திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.