பெயரை மாத்தினா தான் இவங்க மத்தியில வாழலாம் போல.. ட்விட்டரில் இஸ்லாமிய அதிகாரி விளாசல்
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் மாநில முதல்வராக உள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் அதிகாரி ஒருவர் தனது பெயரை மாற்றி கொள்ள விரும்புவதாக, ட்விட்டரில் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் கும்பல் தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அடுத்து தனது பெயரை மாற்றி வைத்து கொண்டால் என்ன என்று தாம் யோசிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மத்தியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாஜக தலைமையிலான அரசு அமைந்தவுடன், நாட்டின் பல பகுதிகளில் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதிலும் வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வலம் வரும் குண்டர்கள், சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பசு மாடுகளை கடத்தி சென்றதாக கூறி நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலில் உயிரிழந்தவர் பெஹ்லு கான் மீதே, பசுக்களை கடத்தியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இஸ்லாமிய அதிகாரி ஒருவர் தனது பெயரை மாற்றி கொள்ள விரும்புவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனது தொடர் டவிட்டுகள் மூலம், மூத்த அதிகாரி நியாஸ் கான் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் ஒரு நாவல் ஆசிரியரும் கூட.
இது பற்றி கருத்து பதிவிட்டுள்ள நியாஸ் கான், நான் ஒருவேளை எனது பெயரை மாற்றிக் கொண்டு புதிய பெயரை வைத்து கொண்டால் வன்முறை கும்பல்களிடமிருந்து அது என்னை காப்பாற்றும் என நினைக்கிறேன். என்னிடம் குர்தா, தொப்பி மற்றும் தாடி போன்ற என் சமூக அடையாளங்கள் இல்லை.
The new name will save me from the violent crowd. If I have no topi, no kurta and no beard I can get away easily by telling my fake name to the crowd. However, if my brother is wearing traditional clothes and has beard he is in most dangerous situation.
— Niyaz Khan (@saifasa) July 6, 2019
எனவே வன்முறை கும்பல் என்னை சூழ்ந்தால் பொய்யான பெயரை சொல்வதன் மூலம், என்னால் எளிதாக அந்த கும்பல்களிடமிருந்து தப்பிக்க இயலும் என நினைக்கிறேன். இருப்பினும், என் சகோதரர் எங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து தாடி வைத்துள்ளதால் அவர் எப்போதும் ஆபத்தான சூழலிலேயே உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
Since no institution is capable to save us, it is better to switch the name
— Niyaz Khan (@saifasa) July 6, 2019
அதற்கடுத்த ட்விட்டுகளில் எந்த ஒரு அமைப்புக்கும் எங்களை காப்பாற்றும் திறன் இல்லாததால், எங்கள் பெயரை மாற்றி கொள்வது தான் நல்லது என நான் நினைக்கிறேன். மேலும் எங்களது சமூகத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர்களும் தங்கள் திரைப்படங்களை வெற்றி பெற வைக்க, தங்களுக்கு வேறு புதிய பெயரை அவர்கள் வைத்து கொள்ள வேண்டும்.
Bollywood actors of my community should also start finding a new name to protect their movies. Now even the top stars movies have started to flop. They should understand the meaning
— Niyaz Khan (@saifasa) July 6, 2019
தற்போது டாப் ஸ்டார்ஸ் திரைப்படங்கள் கூட தோல்வியடைய தொடங்கியுள்ளன. இதிலிருந்து அவர்கள் குறிப்பிட்ட சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர வேண்டும். மேலும் நான் விரைவில் வெளியிட உள்ள நாவலில், என் சமூக மக்களின் பயம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன என கூறியுள்ளார்.