பரபரக்கும் தேர்தல் களம்.. உதயமான புது கட்சி.. "கிங் மேக்கர்" நாங்கள்தான்.. அதிரடி காட்டும் அப்பாஸ்!
கொல்கத்தா: இஸ்லாமிய மத குரு, பிர்சாடா அப்பாஸ் சித்திக் தலைமையில், புதிதாக ஒரு அரசியல் கட்சி உருவாகியுள்ளது. நாங்கள் 294 தொகுதிகளிலும் போட்டியிட போகிறோம், மேற்கு வங்க அரசியலின் கிங் மேக்கர் நாங்கள்தான் என்றும் அறிவித்துள்ளது அந்த கட்சி.
மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே அங்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், புதிதாக துவங்கப்பட்டுள்ளது ஒரு கட்சி. அதன் பெயர் இந்திய மதசார்பற்ற முன்னணி (ISF). இதன் தலைவர் 34 வயதேயாகும் பிர்சாடா அப்பாஸ் சித்திக் ஆகும். ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய மதகுருவாக அந்த பகுதியில் பிரபலமானவர்.
முன்னேற்றம்
புதிய கட்சியின் குறிக்கோள்கள், பின்தங்கிய மக்களின் முன்னேற்றம், முஸ்லிம்கள், பழங்குடியினர் மற்றும் தலித்துகள் முன்னேற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கட்சி உதயம் மம்தா பானர்ஜி மீதான அதிருப்தியால் உந்தப்பட்டு நடந்துள்ளது என்கிறார் அப்பாஸ் சித்திக்.
மமதா ஏமாற்றிவிட்டார்
இதுபற்றி அப்பாஸ் சித்திக் கூறுகிறார் பாருங்கள்: மமதா பானர்ஜி முதல்வராகும்போது, கல்வி, வேலை வாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார். ஆனால் அது நடக்கவில்லை. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்து வருகிறார். எனவே, பிறரை சார்ந்திருக்காமல் நாமே கட்சி துவங்கலாம் என்று நினைத்தேன். கட்சி ரெடி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஓவைசி கட்சி
பீகாரில் அசாதுதின் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கணிசமான வெற்றியை பதிவு செய்தது. எனவே மேற்கு வங்கத்திலும் அசாதுதின் ஓவைசி கட்சி போட்டியிட உள்ளது. அப்பாஸ் சித்திக் அந்த கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஓவைசியும் அப்படித்தான் சொல்லி வந்தார். ஆனால் இப்போது அப்பாஸ் தனிக் கட்சி துவங்கிவிட்டார்.
சிறுபான்மையினர் ஓட்டுக்கள்
இஸ்லாமிய கட்சிகள் வலுப்பெறுவது பாஜகவுக்கு பலமாகவும், திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினர் ஓட்டுக்கள் மமதாவுக்கு கிடைக்காமல் சிதறுவது அவரது ஆட்சி கனவை தகர்த்துவிடும். பாஜகவுக்கு பிற ஓட்டுக்கள் எளிதாக போய்விடும். அப்பாஸ் துவங்கியுள்ள கட்சி மமதாவுக்கு மற்றொரு தலைவலியாக பார்க்கப்படுகிறது.