3 முறை தலாக் கூறுவதற்கு தடை கோரி பொது விசாரணை நடத்தும் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு
மும்பை: மூன்று முறை தலாக் கூறுவதற்கு தடை விதிக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த பாரதிய முஸ்லீம் மஹிலா அந்தோலன் என்கிற என்.ஜி.ஓ. டெல்லியில் பொது விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின் சில பிரிவுகள் பெண்களுக்கு எதிராக உள்ளது என்று கூறி சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல பெண்களை திருமணம் செய்வதற்கும், மூன்று முறை தலாக் கூறுவதற்கும் முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மூன்று முறை தலாக் கூறுவதற்கு தடை விதிக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த பாரதிய முஸ்லீம் மஹிலா அந்தோலன் என்கிற என்.ஜி.ஓ. டெல்லியில் பொது விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அப்போது முஸ்லீம் பெண்கள் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி தெரிவிப்பார்கள்.
இது குறித்து அந்த என்.ஜி.ஓ.வின் நிறுவன உறுப்பினர் ஜகியா சோமன் கூறுகையில்,
இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். மதமும், குர்ஆனும் சீர்த்திருத்ததை ஏற்கிறது. ஆனால் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் தான் சீர்திருத்தத்தை ஏற்கவில்லை. அவர்களை பொறுத்தவரை இன்னும் நேரம் வரவில்லை என்றார்.
இஸ்லாமிய தனிநபர் சட்ட திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.