முஸ்லிம்களே..! 2 குழந்தைகளோடு நிறுத்திக்கோங்க… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
உதய்பூர்:முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறி, புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.
அந்த சர்ச்சை நாயகரின் பெயர் குலாப் சந்த் கடாரியா. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எதிர்கட்சித் தலைவராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது, குலாப் சந்த் கடாரியா பேசியதாவது:நாட்டின் நிலவும் மிக மோசமான நிலைக்கு முஸ்லிம் மக்கள் தொகையே பொறுப்பாகும். எனவே, அதற்கான சட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது மிக மிக அவசிய தேவையாகி உள்ளது.
நாங்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எங்களை கட்டுப்படுத்தினால் முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்கள் தொகை என்ற ஒரு காரணத்தால் வளர்ச்சிக்காக நாம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாக தான் போகின்றன.
சட்டத் திருத்தங்களை கொண்டுவந்தோ அல்லது அதை மாற்றுவதன் மூலமோ சட்டங்களைச் சரியாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அவ்வாறு செயல்படுத்த தவறிவிட்டால், வரக்கூடிய 50 ஆண்டுகளில் மக்கள்தொகை மேலும் மிதமிஞ்சி மிக மோசமான நிலையை எட்டும்.
ஒரு சட்டத்தை இயற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே சட்டத்தை மாற்ற முடியும் என்கிற விதியையும் மாற்றவேண்டிய அவசர தேவையும் தற்போது எழுந்துள்ளது என்று கடாரியா பேசினார்.
சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவராக கடாரியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது போன்று கடாரியா சர்ச்சையாக பேசுவது முதல் முறையல்ல.
வசுந்தரா ராஜேவின் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக அவர் இருந்தார். அப்போது, நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினரே அல்ல. அவர்கள் இந்த நாட்டில் மாபெரும் மக்கள்கூட்டமாக இருக்கின்றனர் என்று பேசி சர்ச்சையை உண்டுபண்ணியவர் என்பது குறிப்பிடத்தக்கது.