முஸ்லீம்கள் எல்லோரும் பாகிஸ்தான் செல்ல வேண்டும்.. அவர்கள் இந்தியர்கள் அல்ல.. பாஜக எம்.பி பரபரப்பு
முஸ்லீம்கள் எல்லோரும் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என பாஜக எம்.பி பேசி இருக்கிறார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் யோகி தலைமையில் பாஜக ஆட்சி வந்த பின் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. முக்கியமாக தாஜ்மஹாலுக்கு எதிராக நிறையச் சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
முதலில் தாஜ்மஹாலை இஸ்லாமிய கல்லறை என்று கூறி அதைச் சுற்றுலாத்தலங்களின் பட்டியலில் இருந்து தூக்கினார்கள். இந்த நிலையில் அதை இந்து கோவில் என்று கூறி, வரும் பிப்ரவரி 18ம் தேதி தாஜ் மஹோத்தவ் விழா நடத்த இருக்கிறார்கள்.
இதுகுறித்த பேசிய அம்மாநில பாஜக எம்.பி வினய் கட்டியார் முஸ்லீம்கள் யாரும் இந்தியர்கள் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கோவில்
தாஜ்மஹால் குறித்து பேசிய பாஜக எம்.பி வினய் கட்டியார் ''தாஜ்மஹால் முதலில் இந்து கோவிலாகத்தான் இருந்தது. அதன்பின் அதை ஷாஜகான் ஆக்கிரமித்தார். இப்போதும் அதை மக்கள் சிவன் கோவில் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு விழா எடுக்க எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது'' என்றார்.
பாகிஸ்தான் இல்லை
இந்த சர்ச்சை குறித்துப் பேசிய போது முஸ்லீம் இயக்கத் தலைவர் அசாவுதின் குவாசி ''முதலில் இஸ்லாமியர்களை இந்தியர்கள் இல்லை என்று சொல்லும் நபர்களைக் கைது செய்ய வேண்டும். இஸ்லாமியர்களை யாரெல்லாம் பாகிஸ்தான் போகச் சொல்கிறார்களோ அவர்களைக் கைது செய்ய வேண்டும்'' என்றார்.
வெளியேறுங்கள்
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக நேற்று வினய் கட்டியார் ''இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போகச் சொல்லவில்லை. அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று சொல்கிறேன். அவர்கள் இந்தியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. இஸ்லாமியர்கள் யாரும் இந்தியர்கள் இல்லை'' என்று குறிப்பிட்டார்.
கைது
மேலும் ''இந்தியாவைக் குறித்து தவறாகப் பேசுபவர்களை கைது செய்ய வேண்டும். முக்கியமாகத் தேசிய கொடியை மதிக்காதவர்களைக் கைது செய்ய வேண்டும். இந்த நாட்டில் எங்கும் பாகிஸ்தான் கொடி இருக்கவே கூடாது'' என்று குறிப்பிட்டார்.