2030ல் இந்தியா முஸ்லிம்கள் வசமாகி விடுமாம்.. "அலறுகிறார்" ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ!
2030-ஆம் ஆண்டில் இந்தியா முஸ்லிம்களின் வசமாகிவிடும் என்று ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்: இந்துக்களின் எண்ணிக்கையை காட்டிலும் தங்கள் சமூகத்தினர் அதிகம் பேர் இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்வதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆல்வார் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளவர் பன்வாரிலால் சிங்கால். இவர் தனது பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், முஸ்லிம்கள் 12-14 குழந்தைகளை பெற்றுக் கொண்டு வருகின்றனர். ஆனால் இந்துக்களோ ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக் கொள்கின்றனர்.
14 குழந்தைகளை முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டால், வரும் 2030-இல் இந்தியா முஸ்லிம்களின் வசமாகிவிடும். இந்துக்கள் செலுத்தும் வரியையும், அரசின் வளங்களையும் முஸ்லிம்கள் சுரண்டுகின்றனர்.
முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்தால் இந்துக்களின் இருப்பு என்பது குறைந்துவிடும். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முதல்வர் இருக்கைகளில் முஸ்லிம்களே அமர இது திட்டமிட்டு செய்யப்படும் சதி.
முஸ்லிம்கள் ஆட்சி செய்தால் இந்துக்கள் இரண்டாம் குடிமகன்களாகிவிடுவர் என்று கூறியுள்ளார். ஆல்வார் மற்றும் அஜ்மீர் மக்களவை தொகுதிகளுக்கு வரும் 29-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் இத்தகைய சர்ச்சை கருத்தை பன்வாரிலால் சிங்கால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிங்காலிடம் கேட்டபோது எனது பேஸ்புக் பதிவை பலமுறை பரிசீலனை செய்துதான் பதிவிட்டேன். எனவே அதை திரும்ப பெற்றுக் கொள்ளமாட்டேன் என்றார்.