என்ன இருந்தாலும் வாழப்பாடியார் மாதிரி வருமா!
Recommended Video
டெல்லி: காவிரி விவகாரத்துக்காக தனது பதவியை தூக்கி எறிந்த தில் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. யமுத்துக்கருப்பனும் அப்படித்தான் என்று மக்கள் தேவையில்லாமல் சபலப்பட்டு விட்டனர். ஆனால் அப்படியெல்லாம் இல்லைங்க என்று ஜகா வாங்கி விட்டார் முத்துக்கருப்பன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டம். மத்தியில் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றாலும் காவிரிக்காக தமிழக அரசு கர்நாடகத்துடன் போராடும் நிலையே உள்ளது.
காவிரி நீரை பெற்று தரவும், மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் எதுவுமே முழு மனதுடன் நடைபெறுவதாக தெரியவில்லை.
ராஜினாமா கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், நடுநிலையாளர்களின் கோரிக்கை ஆகும். ஆனால் பதவியை விட்டு கொடுக்க மனமில்லாத அரசியல்வாதிகள் போராட்டம், மிரட்டல் என ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல் உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கெடுவை வீணடித்துவிட்டனர்.
ராஜினாமா நாடகம்
இந்நிலையில் காவிரி நீர் இல்லாத நிலை பதவி ஒரு கேடா என்று ஆவேசமடைந்த முத்துகருப்பன் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி இன்று குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆனால் கடைசியில் இது நாடகமாகி விட்டது.
கொடுப்பது போல கொடுத்து
அதாவது இவர் கொடுப்பது போல கொடுத்தார். அவரும் நிராகரிப்பது போல நிராகரித்தார். இப்போது மறுபடியும் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறி விட்டார் மு.க. அதாவது முத்துக்கருப்பன். காவிரிக்காக முத்துகருப்பன் தனது பதவியை உதறியதன் மூலம் அவரது நோக்கம் பதவியல்ல, மக்கள் நலன்தான் என்பதை நிரூபித்துவிட்டார் என மக்கள் சற்றே சபலப்பட்டு விட்டனர். இதன் மூலம் காவிரிக்காக மக்கள் நலனுக்காக பதவியை துறந்த 2-ஆவது அரசியல்வாதியாக அவர் பார்க்கப்பட்டார்.
வாழப்பாடியார் வாழப்பாடியார்தான்
இதற்கு முன்பு 1992-ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அப்போது மத்திய அரசு காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார் வாழப்பாடியார். அதன் பின்னர் ஒருவர் கூட காவிரிக்காக எதையும் இழந்ததில்லை. அந்த வரிசையில் முத்துக்கருப்பன் சேர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.. என்ன செய்வது.. வாழப்பாடியார் வாழப்பாடியார்தான்..அவரது வாசல்படி நிழலுக்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது போல!