முசாபர்நகர் கலவரம்.. கைது செஞ்சு பாருங்க... நடக்கிறதே வேற.. சவுண்டு விடுகிறார் உமாபாரதி!!
லக்னோ: முசாபர்நகர் மாவட்ட கலவரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் பலியாகினர். 40 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 16 அரசியல் தலைவர்கள் மீது மாநில போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 16 தலைவர்களையும் கைது செய்ய நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து பல அரசியல்வாதிகள் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உமாபாரதி, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்களை கைது செய்தால் விபரீத விளைவுகளை மாநில அரசு சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் அப்படி எங்களது கட்சி எம்.எல்.ஏக்களை கைது செய்தால் ஆளும் சமாஜ்வாடி அரசு மீண்டும் மோதல்களை உருவாக்க விரும்புகிறது என்றுதான் அர்த்தம்.. மாநில அரசு பாரதிய ஜனதாவையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் மட்டுமே குறிவைக்கிறது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.