அமைதி திரும்பியது: கலவரம் பாதித்த முசாபர்நகரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்
முசாபர்நகர்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கன்வல் கிராமத்தில் பெண்ணை கிண்டல் செய்து தொடர்பாக 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்ததில் 47 பேர் பலியாகினர். கலவரம் வெடித்ததையடுத்து மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது.
ஊடரங்கு உத்தரவுக்கு பிறகு புதிதாக வன்முறை சம்பவங்கள் நடக்காததால் அந்த உத்தரவு கடந்த வாரம் பகல் நேரத்தில் மட்டும் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் கலவரம் பாதித்த பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
மாவட்டத்தில் அமைதி திரும்பியதையடுத்து நேற்று மாலை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. முன்னதாக கலவரத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமரும், ரூ. 10 லட்சம் அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.