இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன்.. அன்னா ஹசாரே சூளுரை
டெல்லி: தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான போராட்டக்காரர் அன்னா ஹசாரே தெரிவித்தார்.
'ஊழலற்ற இந்தியாவை நோக்கி' என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் பேசிய அன்னா ஹசாரே, மேலும் கூறியதாவது: இன்னொரு கேஜ்ரிவாலை எனது போராட்டத்தின் மூலம் உருவாக விட மாட்டேன். எனது போராட்டத்திற்கு ஆதரவளிப்போரிடம் பிரமாண பத்திரம் வாங்க உள்ளேன். அதில், அரசியலுக்கு செல்ல மாட்டோம் என்ற உறுதிமொழி இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அரசியல்வாதிகள் உருவாகுவது தடுக்கப்படும்.
மத்திய அரசு ஒரு பக்கம் ஊழலற்ற இந்தியா என்று கூறுகிறது, மறுபக்கம், லோக்பால் மசோதாவை பலவீனப்படுத்துகிறது. கருப்பு பணத்தை மீட்பேன் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளையே கொடுத்துக் கொண்டிருக்காமல் மோடி செயலில் இறங்க வேண்டியது அவசியம்.
2016 ஜூலை 27ம் தேதி, லோக்பால் சட்ட மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு லோக்சபாவில் அன்றே அது நிறைவேறியது. விவாதமே இல்லை. அடுத்த நாளில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்ட திருத்தம், ஜூலை 29ம் தேதி, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 3 நாளில் அந்த மசோதா பலவீனப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வரும் மார்ச் மாதம், அன்னா ஹசாரே துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.