போலீஸார் என்னை அடித்தார்கள்... சொல்கிறார் ஸ்ரீசாந்த்
டெல்லி: மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக நான் காவல்துறையில் கொடுத்த வாக்குமூலம், போலீஸார் என்னை உடல் ரீதியாக வற்புறுத்திய பிறகு கொடுத்ததாகும் என்று இப்போது கூறுகிறார் வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.
ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான புகாரில் சிக்கி கைதாகி தற்போது வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
இந்த நிலையில் தன்னை போலீஸார் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பிசிசிஐக்கு கடிதம்
இதுதொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தான் அப்பாவி, தவறு செய்யவி்ல்லை என்று விளக்கியுள்ளார் ஸ்ரீசாந்த்.
கட்டாயப்படுத்தினர் - அடித்தனர்
என்னை போலீஸார் தங்களது காவலில் வைத்திருந்தபோது உடல் ரீதியாக துன்புறுத்தினர். கட்டாயப்படுத்தினர். அதன் பேரில்தான் நான் வாக்குமூலம் அளிக்க நேர்ந்தது. மேலும் எனது உறவினர்களையும் கைது செய்வோம் என்று மிரட்டினர்.
விரும்பி தரவி்ல்லை
நான் காவல்துறையினரிடம் விருப்பப்பட்டு வாக்குமூலம் எதையும் அளிக்கவில்லை. மன ரீதியாக, உடல் ரீதியாக என்னை போலீஸார் துன்புறுத்தினர். துன்புறுத்தினர். ஏற்கனவே எழுதி வைத்திருந்த அறிக்கைகளில் கையெழுத்து வாங்கினர்.
நான் தவறு செய்யவில்லை
நான் குற்றம் செய்தவன் என்று கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரி முடிவு செய்திருப்பது, போலீஸார் கொடுத்த அறிக்கைகள் அடிப்படையில்தான். ஆனால் இதை ஏற்க முடியாது. காவல்துறையினரின் விசாரணை முறைகள் கட்டாயத்தின் பேரில் இருந்தன என்பதால் அதை வாரியம் ஏற்கக் கூடாது.
எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக நான் யாருடனும் பேசியதை காவல்துறை இடை மறித்துக் கேட்கவில்லை. அதுதொடர்பான ஆதாரம் அவர்களிடம் இல்லை. என் மீதான காவல்துறையின் குற்றச்சாட்டு நியாயமற்றது.
நான் லஞ்சம் வாங்கவில்லை
நான் லஞ்சம் வாங்கியதற்கும், கொடுத்ததற்கும், பணம் பெற்றதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதே உண்மை என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.