வளமான அஸ்ஸாமை பின்தங்கிய மாநிலமாக்கிவிட்டது காங்.: பிரசார கூட்டத்தில் மோடி தாக்கு
குவஹாத்தி: வளம் வாய்ந்த அஸ்ஸாமை காங்கிரஸ் அரசுகள் மிகவும் பின் தங்கிய மாநிலமாக்கிவிட்டது என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அஸ்ஸாம் சட்டசபைக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக தருண் கோகாய் தலைமையில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸை இந்த முறை அகற்ற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதனால் அஸ்ஸாமில் பாஜக தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 91 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்ற தொகுதிகளை தன் கூட்டணி கட்சியான அஸ்ஸாம் கண பரிஷத் மற்றும் 2 சிறிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. தற்போது அம்மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இநிலையில் பிரதமர் மோடி இன்று அஸ்ஸாமின் தின்சுகியாவில் பிரச்சாரத்தை தொடங்கினார். மோடி தமது பிரசாரத்தின் போது, வளமான அஸ்ஸாம் மாநிலத்தை காங்கிரஸ் பின் தங்கிய பகுதியாக்கிவிட்டது.
நமது போராட்டம் முதலமைச்சர் தருண் கோகாய்க்கு எதிரானது அல்ல; வறுமை மற்றும் ஊழலுக்கு எதிரானது; ஏழை மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வருமானம் மற்றும் முதியவர்களுக்கு மருத்துவ வசதி ஆகிய மூன்றையும் செய்தால் மட்டுமே அஸ்ஸாமின் நிலைமை மாறும் என்றார்.