நேசனல் ஹெரால்டு வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை... சொல்கிறார் சோனியாவின் மருமகன்
டெல்லி: பொய்யாக போடப்பட்டுள்ள நேசனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக சோனியாகாந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை நடத்தி வந்த நிறுவனத்தில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கைள சோனியா, ராகுல் உள்ளிட்ட 6 பேர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக 6 பேரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து சோனியா, ராகுல் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். ஹெரால்டு வழக்கில் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என தெரிவித்துள்ளது
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து கூறியுள்ள சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, நேசனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார். இது உண்மையில்லை என்றும் திட்டமிட்டு அவதூறு பரப்பப் படுவதாகவும் கூறியுள்ளார் ராபர்ட் வதேரா.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டியுள்ள வதேரா, உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்று பதிவிட்டுள்ளார். மாமியாருக்கும், மைத்துனருக்கும் தனது முழு ஆதரவு உண்டு என்றும் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.