தீக்குளித்த மனைவி.. பார்த்து ரசித்த ”சைக்கோ” கணவன்.. மும்பையில் பயங்கரம்
மும்பை:நான் தீக்குளித்தபோது எனது கணவர் நான் எரிவதைத் தடுக்காமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தீக்குளித்து தற்கொலை செய்த மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் மரண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி பெயர் சஞ்சனா கோல்வாங்கர். இத்தம்பதிக்குத் திருமணமாகி 7 வருடமாகி விட்டது.
38 வயதான சஞ்சனாவை, அவரது மாமியார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர். இதனால் சஞ்சனா வேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சஞ்சனா தனது கணவர் வீட்டில் தீக்குளித்து விட்டார். இதையடுத்து உடல் முழுவதும் எரிந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் சஞ்சனா மரணமடைந்தார்.
மரணமடைவதற்கு முன்பு அவர் போலீஸுக்கு மரண வாக்குமூலம் அளித்தார். அதில், "அன்று எனக்கும் கணவர் வீட்டாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது வேதனையில் நான் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டேன். அப்போது எனது கணவர் நான் எரிவதை ரசித்துப் பார்த்தார். தீயை அணைக்க அவர் முன்வரவில்லை.
நான் வலியால் துடித்தபோதும் எனது கணவர் அமைதியாக இருந்தாரே தவிர காப்பாற்ற முயலவில்லை. கடைசியில்தான் எனது உடலில் தண்ணீரை ஊற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
எனது முடிவுக்கு கணவர், மாமியார் வனிதா, கணவரின் அக்காள் பிரகதி ஆகியோர்தான் காரணம்" என்று கூறியிருந்தார் சஞ்சனா.
சஞ்சனாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது போலீஸார் இந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.