தனிப்பட்ட முறையில் யாரையுமே விமர்சிக்கலையே... எதுக்கு வருத்தம் தெரிவிக்கனும்?: சீறும் இளங்கோவன்
டெல்லி: தனிப்பட்ட முறையில் தாம் யாரையும் விமர்சிக்காத நிலையில் எதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொந்தளித்துள்ளார்.
சென்னை வருகை தந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இளங்கோவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழக அரசும் இளங்கோவன் மீது அவதூறு வழக்குப் போட்டது.
இதனிடையே சென்னை காமராஜர் அரங்க வணிக வளாக வாடகையில் இளங்கோவன் மோசடி செய்ததாகவும் அதை தட்டிக் கேட்ட தம்மை உருட்டுக் கட்டையால் தாக்கியதாகவும் வளர்மதி என்ற பெண் புகார் கொடுத்தார். இப்புகாரில் இளங்கோவன் கைது செய்யப்படக் கூடும் என கூறப்பட்டது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துவிட்டு டெல்லிக்கு சென்றார் இளங்கோவன். கடந்த 2 நாட்களாக அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியாத நிலை இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன் ஜாமீன் அளித்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் இளங்கோவன்.
அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் தேர்தலை முன்னிட்டு உறவு இருக்கிறது என்பதைத்தான் கள்ள உறவு இருப்பதாகக் கூறினேன். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கவில்லை.
யாரையும் அரசியலுக்கு அப்பாற்பட்டு புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. எனவே நான் வருத்தம் தெரிவிக்க தேவையில்லை.
அப்போதும் விடாமல், மீண்டும் மீண்டும் அது குறித்து பிரச்னை எழுப்புவது, இதனை அரசியலாக்க நினைப்பதைத்தான் காட்டுகிறது.
எனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. போராட்டம் வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அதே போன்று நானும் காங்.தொண்டர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன்.
என் மீதான 2 வழக்குகளுமே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தூண்டுதலால் போடப்பட்ட வழக்குகள்தான்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.