புகழ்பெற்ற மைசூர் தசரா விழா தொடங்கியது: பட்டத்து வாளை வைத்து தர்பார்!
கர்நாடக மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க மைசூர் தசரா விழாவை, சாமுண்டி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாமூண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் கிரிஷ்கர்னாட். இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் சீனிவாசபிரசாத், எச்.எஸ்.மகாதேவபிரசாத், ஜெயசந்திரா, பிரதாப் சிம்ஹா எம்.பி, மாவட்ட கலெக்டர் ஷீகா, மாநகர மேயர் ராஜேஸ்வரி உள்பட மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மைசூரில் உள்ள கலை மன்றம், அரண்மனை வளாகம், பண்ணி மண்டபம், மானிச வளாகம் உள்பட பல அரங்குகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள், சங்கீதம், பரதம், நாட்டுபுற நிகழ்ச்சிகளுககு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களான கே.ஆர்.எஸ், பால்முரி,
ரங்கனதிட்டு, ஸ்ரீரங்கபட்டணா, நஞ்சன்கூடு, மேல்கோட்டை, பி.ஆர்.ஹில்ஸ் போன்ற பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தசரா விழாவை முன்னிட்டு மைசூர் மாநகரம் முழுவதும் உள்ள அரசு கட்டிடங்கள், கர்நாடக திறந்தவெளி பல்கலைகழகம், மைசூர் பல்கலைகழகம், முக்கிய வளைவுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தனியார் நட்சத்திர ஓட்டல்கள், பள்ளி, கல்லூரிகள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. விழாவின் இறுதி நாளான வரும் அக்டோபர் 4ம் தேதி கண்ணை கவரும் தங்க அம்பாரி ஊர்வலம் நடக்கிறது. அதில் ஆளுநர் வஜுபாய்ருடாபாய் வாலா உள்பட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.
யதுவம்சத்தை சேர்ந்த கடைசி மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் கடந்தாண்டு காலமானதால், மன்னர் குடும்பத்தின் சார்பில் நடத்தப்படும் தனியார் தர்பார் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அரச குடும்பத்தின் பட்டத்து வாளை சிம்மாசனத்தில் வைத்து அதையே ராஜாவாக கருதி தர்பார் நடத்தப்பட்டது.
தர்பார் எனப்படுவது அந்த காலத்தில் ராஜாக்கள் சிம்மாசனத்தில் உட்கார்ந்து அமைச்சரவையை நடத்துவதை நினைவுகூறும் நிகழ்வாகும்.