ராஜாதி ராஜா.. ராஜ கம்பீர... ஜூன் 27ம் தேதி மைசூர் ராஜா கல்யாணம் பண்ணிக்கப் போறார்!
மைசூரு: மைசூரு மன்னர் யதுவீருக்கு வரும் 27ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அரண்மனை வட்டாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மைசூரு மன்னராக யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடையார் உள்ளார். இவருக்கும் ராஜஸ்தான் அரச குடும்பத்தை சேர்ந்த திரிஷிகாகுமாரிக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமணத் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் மன்னர் யதுவீரின் திருமணத் தேதியை அரண்மனை வட்டாரம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் 27ம் தேதி மைசூரு மன்னருக்கு திருமணம் நடைபெற உள்ளது. முதலில் மைசூர் அரண்மனை தர்பார் ஹாலில் திருமண வரவேற்பும், அதனைத் தொடர்ந்து திருமணமும் நடைபெற இருக்கிறது.
திருமணத்துக்கான அழைப்பிதழ்களை பிரமோதா தேவி முக்கிய விருந்தினர்களுக்கு அனுப்பி வருகிறார். அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்.
அதோடு, திருமணத்துக்கு வருபவர்கள் ஆண்களாக இருந்தால் வெள்ளை அல்லது கறுப்பு நிற நீள கோட், வெள்ளை பேண்ட், டர்பன் அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கோட் சூட் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமணத்தையொட்டி மைசூரு அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.