கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்.. ஆந்திரா மர்ம நோய்க்கு ஈயம் காரணம்.. பரபர தகவல்
அமராவதி: ஆந்திராவில் மேற்கு கோதாவரியில் உள்ள எலூர் பகுதியில் கொத்துக்கொத்தமாக மக்கள் மயங்கி விழுந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 17 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்க்கு உடலில் ஈயம் அதிகமானதே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியில் உள்ள எலூர், டெண்டுலூரை சுற்றியுள்ள கிராமங்களில் மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு, வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது. வலிப்பு நோய் ஏற்பட்டது போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு தென்படுகிறது. விசித்திரமாக கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் மயங்கி விழுந்தனர். இப்படி பலரும் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆந்திராவில் பரபரப்பு
மர்ம நோயால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த மர்ம நோயால் மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்திருக்கிறது இதற்கிடையே, ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஜெகன் மோகன் ரெட்டி
இந்த மர்ம நோய்க்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மர்ம நோயால் பலியானவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் ஈயம் அதிகளவில் கலந்திருப்பது உறுதியானது. இந்த நோயின் உண்மையான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய மருத்துவ குழு, மற்றும் புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன் மோகன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சந்தேகங்கள்
அப்போது முதல்வர் ஜெகன் மோகன் கூறுகையில், ‘‘மர்ம நோய்க்கான காரணத்தை கண்டறிய மருத்துவ குழுக்கள் சோதனை நடத்துகிறார்கள். ஈயம் மற்றும் ஆர்கனோக்ளோரின் அடிப்படையில் சந்தேகங்கள் உள்ளன. பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. மீண்டும் நாளை அனைவருடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார்.
மருத்துவர்கள் தகவல்
மருத்துவர்களின் முதல்கட்ட தகவல் படி ஈயமே மர்ம நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக ரத்தத்தில் ஈயத்தின் அளவு 10 மைக்ரோகிராம் தாண்டினால் ஆபத்து. அந்த அளவை தாண்டினால் நரம்பு பலவீனம், சிறுநீரக பிரச்னை, மூளை பாதிப்பு, காது கேளாமை, கை மற்றும் கால்களில் உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
குழந்தைகளை பாதிக்கும்
குடிநீர், சாலையோர உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள், குங்குமப்பூ, பொம்மைகள், தாவர உணவுகள், பாரம்பரிய பொருட்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஈயம் உடலில் கலக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.. 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் வரை ஈயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் மருத்துவர்கள்,. இந்த நோய் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பொதுவாக குடிநீர் மற்றும் பால் மூலம் நோயாளிகளின் உடலுக்குள் சென்றிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்றார்கள்..