தான் பிச்சை எடுக்கும் கோவிலுக்கு ரூ. 2.5 லட்சம் தானமாக கொடுத்த சீதா பாட்டி
Recommended Video
மைசூர்: மைசூரைச் சேர்ந்த சீதாலட்சுமி என்ற 85 வயது பிச்சை எடுக்கும் பாட்டி, தான் தினசரி பிச்சை எடுக்கும் கோவிலுக்கே ரூ. 2.5 லட்சம் தானமாக கொடுத்து அனைவரின் மூக்கிலும் விரலை வைக்கச் செய்துள்ளார்.
வொன்டிக்கொப்பல் என்ற இடத்தில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி கோவில் முன்புதான் சீதாலட்சுமி தினசரி பிச்சை எடுப்பது வழக்கம்.
பிச்சை எடுக்கும் பணத்தில் தனக்குப் போக மீதமுள்ள பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளார் சீதாலட்சுமி பாட்டி. அந்தப் பணத்தைத்தான் தற்போது கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட பத்து வருட கால சேமிப்பாம் இது.
பணம் சேமிப்பு
முன்பு இவர் வீட்டு வேலை பார்த்து வந்தார். ஆனால் வயோதிகம் அதிலிருந்து அவரை முடக்கி விட்டது. இதையடுத்து பிச்சை எடுத்து வயிற்றுப்பாட்டைக் கவனிக்க ஆரம்பித்தார். கடந்த பத்து வருடமாக பிச்சை எடுத்து வருகிறார்.
அனுமன் ஜெயந்திக்கு தானம்
தற்போது இவர் கோவிலுக்கு தானமாகக் கொடுத்துள்ள பணத்தை வைத்து அனுமன் ஜெயந்தியின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், கோவிலில் பக்தர்களுக்குத் தேவையான நல்லதைச் செய்யவும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம்.
கோவிலே வீடு
கோவிலில் பிச்சை எடுப்பதில் மட்டும் சீதாலட்சுமி பாட்டி ஈடுபடுவதில்லை. கோவிலில் சிறு சிறு வேலைகளையும் இவர் தன்னால் முடிந்த அளவுக்கு செய்வாராம். தனது வீடு போல கோவிலைப் பார்த்துக் கொள்வாராம்.
பக்தர்கள் தானம்
பக்தர்களிடம் இவரா கை ஏந்தி நிற்க மாட்டாராம், கேட்க மாட்டாராம். அவர்களாக விருப்பப்பட்டு கொடுப்பதை வாங்கிக் கொள்வாராம். இவரது நல்ல மனதுக்காக உள்ளூர் மக்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
கோவில் பாதுகாக்கிறது
என்னைக் கோவில் பாதுகாக்கிறது. அந்தக் கோவிலுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய நினைத்தேன். செய்துள்ளேன். இதில் என்னப்பா இருக்கிறது என்று வெள்ளந்தியாக கேட்கிறார் சீதாப்பாட்டி. உண்மையிலேயே பாட்டிக்குப்ப பெரிய மனசுதான் இல்லையா.