‘தூய்மை இந்தியா' திட்ட தரவரிசை.. சுத்தமான நகரம் பட்டியலில் திருச்சி 2 வது இடம்.. முதலிடத்தில் மைசூரு
மைசூரு : மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள நகரங்களை தூய்மை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தர வரிசைப்பட்டியலில், மைசூர் முதல் இடத்தையும், திருச்சி 2 வது இடத்தையும் பிடித்துள்ளன.
மதுரை 20 ஆவது இடத்திலும், சென்னை 61 ஆவது இடத்திலும், கோவை 196 ஆவது இடத்திலும் உள்ளன. வெளியிடங்களில் மனிதக்கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை (குப்பைகளை அகற்றுதல்) போன்றவற்றின் அடிப்படையில் இந்த வரிசைப்பட்டியல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மைசூரில் மிகக்குறைந்த அளவில் வெளியிடங்களில் மனிதக்கழிவு குறைவாகவும், மிக விரிவான திடக்கழிவு மேலாண்மை நடைமுறையில் உள்ளதாலும் அந்நகரம் முதலிடத்திற்கு தேர்வாகியுள்ளது.
முதல் 100 நகரங்கள் பட்டியலில், தென் மாநிலங்கள் 39, கிழக்கில் 27, மேற்கில் 15, வட மாநிலங்களில் 12 மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 7 உள்ளன.
27 தலைநகரங்களில் பெங்களூரு 7, திருவனந்தபுரம் 8, டெல்லி 16, புதுச்சேரி 23, ஐதராபாத் 275, மற்றும் பாட்னா 429 ஆவது இடத்திலும் உள்ளன.
முதல் 10 நகரங்களில் திருச்சி இரண்டாவது இடத்திலும், கொச்சி 4 வது இடத்திலும், திருவனந்தபுரம் 8 வது இடத்திலும் உள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலில் மிகவும் கீழே உள்ள 100 நகரங்களில் வடக்கு 74, கிழக்கு 21, மேற்கு 3 மற்றும் தென் மாநிலங்களில் இரண்டும் இடம் பெற்றுள்ளன.
31 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட476 முதல் தர நகரங்களில் வெளியிடங்களில் மனிதக்கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர், குடிநீர் தரம், பரவும் தொற்று நோய்கள் போன்ற பல அளவுகோள்களின் அடிப்படையில் 2014-15 ஆம் ஆண்டு மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் 2008 ஆம்ஆண்டின் தேசிய தூய்மை கொள்கையில் கூறப்பட்டுள்ளபடி இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.
நகர்ப்புறங்களில் வீட்டுவசதி, பொதுக்கழிப்பிடங்கள், நகராட்சி திடக்கழிவு அகற்றல் போன்றவற்றில் முனைப்பு செலுத்தி தூய்மை இந்தியா திட்டம் நிறைவேற்றப்படுவதால் இந்த சர்வே மூலம் தகவல்கள் திரட்டப்பட்டன. இந்த நகரங்களின் ஒட்டுமொத்த தூய்மை வரிசைப்படுத்தல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த சர்வேயில் உத்தரபிரதேசம் 61, மேற்குவங்கம் 60, மகாராஷ்ட்ரா 43, மத்தியபிரதேசம் 32, குஜராத் 30, ஆந்திரா 30, தமிழ்நாடு 29, ராஜஸ்தான் 28, பீகார் 27, கர்நாடகா 26, ஹரியானா 20, பஞ்சாப் 16, தெலங்கானா 11, ஒடிசா 10, ஜார்கண்ட் 10, சத்தீஸ்கர் 9 மற்றும் கேரளா, உத்தர்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள் தலா 6 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த தர வரிசைப் பட்டியலில், பிரதமரின் மக்களவை தொகுதியான வாரணாசி 418 மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி 240 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
பட்டியலில் இறுதி இடத்தில், அதாவது 476-வது இடத்தில் மத்திய பிரதேசத்தின் டாமோ நகரம் உள்ளது.
கடந்த வருடம் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரதின தின உரையாற்றிய பிரதமர் நரேந்தர மோடியால் அறிவிக்கப்பட்டது ‘தூய்மை இந்தியா' திட்டம்.
பிறகு, மகாத்மா காந்தியின் நினைவாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி டெல்லியின் மந்திர் மார்க் பகுதியில் மோடியால் இத்திட்டடம் துவக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.