ஐபிஎல் பிக்ஸிங்: முத்கல் கமிட்டி அறிக்கைல உங்க பேரும் இருக்கே சீனிவாசன்... சுப்ரீம் கோர்ட் 'சூடு'
டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கு விசாரணை அறிக்கையில் சீனிவாசன் பெயரும் உள்ளதால் அவர் தொடர்ந்து தலைவராக நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
6வது ஐ.பி.எல். பிக்ஸிங்கில் நிகழ்ந்த முறைகேடுகளைத் தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல். போட்டிகளின் போது அவரை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் சீனிவாசன் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பாக எனக்கு எதுவுமே தெரியாது. என்ன காரணத்துக்காக நான் பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய பதவிக்காலம் முடியும் வரை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நீடிக்க அனுமதிக்க வேண்டும்' என அவர் தெரிவித்திருந்தார்.
இன்று அந்த மனு மீதான தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு முடியும் வரையில் சீனிவாசன் பி.சி.சி.ஐ. தலைவராக முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பான விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று பதில் அளிக்க சீனிவாசன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரியும் சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகியுமான சுந்தர்ராமன் பதவியில் நீடிக்க அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல், சீனிவாசன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை பொருட்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், சீல் வைக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் சீனிவாசனின் பெயரும் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரிந்த பின்னர் எங்களுடைய கண்களை மூட முடியாது எனக் கடுமையாக சாடியுள்ள உச்சநீதிமன்றம், சீனிவாசன் உள்பட 13 பேருக்கு எதிரான முகுல் முத்கல் கமிட்டியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து பி.சி.சி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.