பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு அதிகரிக்கும் போட்டி... பகையை மறந்து சரத்பவாரை சந்தித்த என்.சீனிவாசன்
டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான போட்டியில் திடீர் திருப்பமாக சரத்பவாருடன், என்.சீனிவாசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா மரணம் அடைந்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரான தமிழகத்தை சேர்ந்த என்.சீனிவாசன் தலைமையில் ஒரு அணியினரும், கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் தலைமையில் மற்றொரு குழுவினரும் அதிகாரமிக்க அப்பதவியை கைப்பற்றுவதில் தீவிர வேகம் காட்டி வருகிறார்கள்.
கிரிக்கெட் வாரிய தேர்தலில் ஓட்டுபோட தகுதிபடைத்த 30 உறுப்பினர்களில் 10 பேரின் ஆதரவு என்.சீனிவாசனுக்கு உள்ளது. மேலும் 6 பேரின் ஆதரவு இருந்தால் நிச்சயம் இவரது அணிக்கே தலைவர் பதவி என்பதில் சந்தேகமில்லை.
இந்த பரபரப்பான சூழலில் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சரத் பவாரை நேற்றிரவு திடீரென சந்தித்து பேசினார். இதற்காக சிறப்பு விமானம் மூலம் நாக்பூருக்கு சென்ற என்.சீனிவாசன், அங்கு கட்சி கூட்டத்திற்காக சென்றிருந்த சரத் பவாரை, முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேலின் இல்லத்தில் வைத்து சந்தித்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.
என்.சீனிவாசனும், சரத்பவாரும் சில ஆண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் சந்தித்து இருப்பது புதிய திருப்பமாக கருதப்படுகிறது.
சரத்பவாரின் ஆதரவுடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை வசப்படுத்தி விட வேண்டும் என்று என்.சீனிவாசன் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அவரை சந்தித்து ஆதரவு கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பு குறித்து சரத்பவாரிடம் கேட்ட போது, ‘கிரிக்கெட் வாரியத்தில் தற்போதைய சூழல் சரியில்லை. எனவே புதிய தலைவரை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று சீனிவாசன் என்னிடம் கேட்டுக் கொண்டார். அதை நானும் ஏற்றுக் கொண்டேன். தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்றும் சீனிவாசன் என்னிடம் சொன்னார்' என்றார்.
இதற்கிடையே நேற்று பெங்களூரு வந்த என்.சீனிவாசன், தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கிழக்கு மண்டலத்திற்குரியது. எனவே கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி அந்த பதவிக்கு போட்டியிட விரும்புவதாக ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமிதாப் சவுத்ரியும் களத்தில் இறங்கியுள்ளார்.
இதனால் பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கான தேர்வில் பல அதிரடி திருப்பங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.