மைக்ரோசாப்ட் சிஇஓ ஆக நாதெல்லா: இந்திய அமைப்பின் முகத்தில் விழுந்த அறை
டெல்லி: சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆக ஆனது இந்தியாவுக்கு பெருமையா அல்லது இந்திய அமைப்புக்கு கிடைத்த சவுக்கடியா என்பதை யோசிக்க வேண்டும்.
முன்னணி ஐடி நிறுவனமான மைக்ரோசாப்டின் சிஇஓவாக இந்தியரான சத்யா நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார் தெரியுமா என்று உலக இந்தியர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.
நாம் பெருமை கொள்வது ஒருபக்கம் இருக்கட்டும். இத்தனை திறமை வாய்ந்த நபரால் ஏன் இந்தியாவில் பிரகாசிக்க முடியாதா? எதற்காக அவர் அமெரிக்காவில் செட்டிலாகி தனது திறமையை அந்நாட்டு நிறுவனத்திற்காக பயன்படுத்துகிறார் என்று சற்று யோசியுங்கள்.
திறமைசாலிகள்
எந்த துறையில் சிறந்து விலங்கினாலும் இந்தியர்களை அடையாளம் கண்டு அமெரிக்கா தனது பக்கம் இழுத்து ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கா திறமையை மதிப்பதால் நம் ஆட்களும் மதிப்பு இருக்கும் இடத்தில் வேலை பார்க்கவே விரும்புகின்றனர். இப்படி தான் நம் திறமைசாலிகள் எல்லாம் விமானம் ஏறி அமெரிக்கா சென்றுவிடுகிறார்கள்.
கொட்டி கொட்டி
இந்தியாவில் சிறு வயதில் இருந்தே அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறி தன்னம்பிக்கையை அழித்துவிடுகிறார்கள். அதையும் மீறி திறமைசாலியாக ஆனால் முன்னேற விடுவதில்லை சமூகம். நம் நாட்டில் திறமைசாலிகளுக்கு ஒன்றும் பஞ்சமே இல்லை. ஆனால் தன்னம்பிக்கைக்கு தான் பெரும் பஞ்சமாக உள்ளது.
பி.இ.
நம் குழந்தைகள் கிரிக்கெட் வீரர்களாகவோ, எழுத்தாளராகவோ ஆசைப்பட்டால் அவர்களை திட்டி படித்தால் என்ஜினியர், டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று பெற்றோர் கூறுகின்றனர். பிள்ளைகளின் கனவை கருக்கிவிடுகின்றனர். அதனால் தான் பலர் ஆசைப்பட்டது போல் ஆக முடியாமல் வாழ்வில் தவிக்கின்றனர்.
ஐஐடி, ஐஐஎம்
ஐஐடி மற்றும் ஐஐஎம்-இல் படித்தவர்களால் மட்டுமே வாழ்க்கையில் பெரிய ஆட்களாக வர முடியும் என்ற எண்ணம் நம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அப்படி இருக்கையில் மணிபால் பல்கலைக்கழகத்தில் படித்த நாதெல்லா இந்தியாவில் இருந்திருந்தால் நிச்சயம் பெரிய ஆளாக ஆகியிருக்க மாட்டார்.
நாதெல்லா
நாதெல்லா மட்டும் இந்தியாவிலேயே வேலை பார்த்திருந்தால் அவர் இந்நேரம் இந்திய ஐடி நிறுவனம் ஒன்றில் கோடர் வேலையில் இருந்திருப்பார். சம்பளம் அதிகமாக கிடைத்திருந்திருக்கும் ஆனால் நிச்சயமாக சிஇஓவாக ஆகியிருக்கவே மாட்டார்.
மதிப்பு
நம் திறமைசாலிகளை எல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது அமெரிக்கா. நம் சொந்த மண்ணின் திறமைகளை நாம் எப்பொழுது மதிக்கக் கற்றுக்கொள்ளப் போகிறோம்?