மகா சிவராத்திரி: குஜராத்தில் குவிந்த 'அம்மண சாமியார்கள்'! நள்ளிரவில் அதிரவைக்கும் நிர்வாண அணிவகுப்பு
ஜூனாகத்: மகா சிவராத்திரியை முன்னிட்டு குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் சிவன் கோவில் கிணற்றில் புனித நீராட அம்மண சாமியார்களாகிய 'நாகா' பாபாக்கள் குவிந்து வருகின்றனர். இன்றைய மகாசிவராத்திரி நள்ளிரவில் நிர்வாணமாக யானைகள் மீது அமர்ந்தும் பல்வேறு சாகசங்களை வெளிப்படுத்தியும் சாமியார்கள் ஊர்வலம் நடத்த உள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் ஜூனாகாத் நகரின் கிர்னார் மலையடிவாரத்தில் பாவ்நாத் கோவில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி இந்து சாமியார்களின் 'அகாடாக்கள்' எனப்படும் மடங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் நிர்வாண சாமியார்களின் மடங்களும் அடங்கும்.
கிர்னார் மலையின் உச்சியில் உள்ள நேமிநாத் ஜைன ஆலயத்துக்கு 10,000 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள் பாவ்நாத் கோவிலில் உள்ள புனித கிணற்றில் நீராடுவது வழக்கம்.
விடியவிடிய ஊர்வலம்
இதற்காக கிர்னார் மலை அடிவாரத்தில் இருந்து பாவ்நாத் கோவில் வரை நள்ளிரவில் நிர்வாண சாமியார்கள் ஊர்வலம் நடத்துவர். நிர்வாணமாகவே யானைகள் மீது அமர்ந்தும் விதம் விதமாக சாகசங்களை செய்து காட்டியும் விடிய விடிய இந்த ஊர்வலம் நடைபெறும்.
நீராடல்
ஏராளமான பொதுமக்களும் இந்த ஊர்வலத்தை பார்க்க சாரை சாரையாக திரண்டு வருவர். அதிகாலையில் பாவ்நாத் சிவன் கோவிலில் உள்ள புனித கிணற்றில் நீராடி பின்னர் வழிபாடு நடத்துவர்.
குவிந்த நிர்வாண சாமியார்கள்
இந்த ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாவ்நாத் சிவன் கோவிலில் ஏராளமான நிர்வாண சாமியார்கள் எனப்படும் நாகா பாபாக்கள் குவிந்துள்ளனர். இன்று நள்ளிரவு நிர்வாண சாமியார்களின் ஊர்வலம் நடைபெற உள்ளது.
நாகா பாபாக்கள்
இந்த நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களிடம் ஆசிபெறுவதை வட இந்தியர்கள் பெரும் புண்ணியமாக கருதுவர். நேபாளம் பசுபதிநாதர் கோயிலும் சிவராத்திரியை முன்னிட்டு நிர்வாண சாமியார்கள் குவிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2013-ம் ஆண்டு கிர்னார் பாவ்நாத் கோவிலில் நடைபெற்ற நிர்வாண சாமியார்கள் ஊர்வல வீடியோ காட்சி: