நாகலாந்தில் நாய் இறைச்சி விற்கலாம்.. தடையை விலக்கி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குவஹாத்தி :நாகலாந்தில் நாய் இறைச்சி விற்க விதிக்கப்பட்ட தடையை குவகாத்தி (அஸ்ஸாம்) உயர்நீதிமன்றத்தின் கொஹிமா கிளை நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் நாய் இறைச்சியை மீண்டும் விற்க ஜூலை மாதத்திற்கு பிறகு அனுமதி கிடைத்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரு சில சமூகத்தினரால் நாய் இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. இந்நிலையில், நாய்களின் கால்கள் கட்டப்பட்டு, இறைச்சிக்காக அவை கோணிப்பைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து வந்த எதிர்ப்பை தொடர்ந்து நாகாலாந்தில் கடந்த ஜூலை 2-ம் தேதி நாய் மற்றும் நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டது.
இதை எதிர்த்து நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனை செய்வோர் குவாஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கொஹிமா கிளையில் முறையிட்டனர்.
அவர்கள் தங்கள் மனுவில், "அமைச்சரவை எடுத்த முடிவை, அரசு உத்தரவு பிறப்பித்தாக நாய் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு செல்லாது" என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நாகலாந்தின் கொஹிமா உயர் நீதிமன்ற கிளை, இது தொடர்பாக மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 14-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் நாகாலாந்து அரசு பதில் அளிக்கத் தவறியதால், அதன் உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வட கிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலமும் நாய் இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் தடை விதித்து இருந்தது.