ராஜினாமா செய்ய நாகாலாந்து ஆளுநர் விருப்பம்! கால அவகாசம் கோருகிறார் எம்.கே. நாராயணன்
கோஹிமா/கொல்கத்தா: நாகாலாந்து ஆளுநர் அஸ்வினி குமார் தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். அதே நேரத்தில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் தமது பதவியை ராஜினாமா செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்த நிலையில் பல மாநில ஆளுநர்கள் பதவி விலக வற்புறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் ஜோஷி, சத்தீஸ்கரின் சேகர் தத் உள்ளிட்டோர் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
பிடிவாத ஆளுநர்கள்
ஆனால் கர்நாடகாவின் பரத்வாஜ், கேரளாவின் ஷீலா தீட்சித், அஸ்ஸாமின் பட்நாயக் உள்ளிட்டோர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மறுத்து வருகின்றனர்.
அஸ்வினி குமார் ராஜினாமா விருப்பம்
இந்த நிலையில்தான் நாகாலாந்து ஆளுநர் அஸ்வினி குமார் தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். தமது விருப்பத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அஸ்வினி குமார் தெரிவித்தும் இருக்கிறார்.
அவகாசம் கேட்கும் நாரயணன்
மேலும் மேற்கு வங்க ஆளுநராக உள்ள எம்.கே. நாராயணன் தாம் பதவி விலகுவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
கமலாபெனிவால் நீக்கம்?
அதேபோல் குஜராத் மாநில ஆளுநராக இருக்கும் கமலா பெனிவால் நீக்கப்பட இருக்கிறார்.
குஜராத் ஆளுநராக சின்ஹா?
அவருக்குப் பதிலாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை ஆளுநராக்குவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.