சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடரும் போராட்டம்: நாகாலாந்தில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் மூடல்
கோஹிமா: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்துவதால் நாகாலாந்து மாநிலத்தில் அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் ஆளுநர் மாளிகை முன்பாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
கோஹிமா சட்டக் கல்லூரியில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர். அங்கு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் கவுன்சில் தலைவர் சும்டிபா சங்தம், சி.ஏ.ஏ. என்பது எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடியது. இது மத அடிப்படையிலும் எதிரானது; அரசியல் சாசனத்துக்கும் எதிரானது.
மத்திய அரசானது அரசியல் சாசனத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்படி மத்திய அரசு, அரசியல் சாசனத்தைப் பின்பற்றாத போது நாங்களும் ஏன் அதை பின்பற்ற வேண்டும்? மக்களுக்காகத்தான் அரசு. அரசின் முடிவுகளை ஆதரிக்க வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை என்றார்.
இதனிடையே நாகாலாந்தில் மாணவர்கள் போராட்டங்களால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.