அடடா.. நம்ம நாகர்கோவில் ரயில் நிலையம் அசுத்தப் பட்டியலிலா.. "தூய்மை இந்தியா" என்னாச்சு??
டெல்லி: தமிழகத்தின் நாகர்கோவில் ரயில் நிலையம் இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்களில் ஒன்று என்று ஒரு சர்வே முடிவுகளில் வந்துள்ளது.
இந்திய தர கவுன்சில் என்ற அமைப்பானது ரயில்வே துறை அமைச்சகத்துக்காக ஒரு கணக்கெடுப்பை அண்மையில் நடத்தி முடித்தது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய 407 ரயில் நிலையங்களில் சர்வே எடுக்கப்பட்டது.
அதில் குப்பைத் தொட்டியில் குப்பை வழிந்தோடுவதற்கு அருகில் ரயிலை பிடிக்க பயணிகள் ஓடுவதும், சுவர்களில் கறைகள் இருப்பது, கழிப்பறைகள் அசுத்தமாக இருப்பது, கழிப்பறையில் உள்ள குழாய்களில் தண்ணீரின்றி இருப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுத்தம்
மேலும் இந்த சர்வே குழுவினர் 407 ரயில்நிலையங்களுக்கும் சென்று தரைகளில் குப்பை இருக்கிறதா, ரயில் நிலையங்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகள் எடுக்கப்படுகின்றனவா உள்ளிட்டவற்றை ஆராய்ந்தனர்.
வருவாய் அடிப்படையில்....
இது மட்டுமல்லாது இந்திய தர கவுன்சிலின் குழுவினர் 1.2 லட்சம் பேரிடம் கருத்துகளையும் கேட்டனர். இதையடுத்து அசுத்தமான ரயில் நிலையங்கள் எவை என்று பிரிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இதுபோன்ற சர்வேயை எடுத்து ரயில்நிலையங்கள் கொடுக்கும் வருவாய் அடிப்படையில் தர வரிசை செய்யப்படுகிறது.
முதல் 10 இடங்கள்
அதன் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கொடுக்கும் ரயில்நிலையங்கள் ஏ1 பிரிவில் வருகின்றன. இதில் 75 ரயில்நிலையங்கள் அசுத்தமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் முதல் 10 இடங்களை பிடித்தவை:
- மதுரா (உத்தரப்பிரதேசம்)
- கல்யாண் (மகாராஷ்டிரா)
- குவாலியர் (மத்தியப்பிரதேசம்)
- கயா (பீகார்)
- ஹவுரா (மேற்கு வங்கம்)
- முசாஃபர்பூர் (பீகார்)
- வாராணசி (உத்தரப்பிரதேசம்)
- ஜான்சி ( உ.பி.)
- பரேலி (உ.பி.)
- பகல்பூர் (பீகார்) ஆகியன ஆகும்.
ரூ. 50 கோடி வருமானம்
ரூ 6 கோடி முதல் 50 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ள ரயில் நிலையங்கள் ஏ பிரிவில் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 332 ரயில் நிலையங்கள் அசுத்தமானவையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் முதல் 10 இடங்கள்:
- ஷாகஞ்ச்(உ.பி.)
- பாப்ஹூந்து (உ.பி.)
- சசாரம் சந்திப்பு (பீகார்)
- புதிய ஃபராக்கா (மேற்கு வங்கம்)
- அயோத்தியா (உ.பி.)
- ஜகாத்ரி (ஹரியாணா)
- ஆதர்ஷ் நகர் (டெல்லி)
- சாகௌலி சந்திப்பு (பீகார்)
- நாகர்கோவில் (தமிழகம்)
- ஃபரீதாபாத் (ஹரியாணா) ஆகியன ஆகும்.
ஏ1 கேட்டகரி
சுத்தமான ரயில் நிலையங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர், ஜெய்ப்பூர் மற்றும் மார்வார் ஆகிய ரயில் நிலையங்களும், திருப்பதி, புலேரா மற்றும் வாராங்கல் ஆகிய ரயில் நிலையங்களும் முன்னிலை வகிக்கின்றன. சுத்தமான ரயில்நிலையங்கள் ஏ1 பிரிவு:
- ஜோத்பூர்
- ஜெய்ப்பூர்
- திருப்பதி
- விஜயவாடா
- ஆனந்த விகார் டெர்மினல்
- செகந்திராபாத் சந்திப்பு
- பாந்த்ரா
- ஹைதராபாத்
- புவனேஸ்வர்
- விசாகப்பட்டினம்
ஏ பிரிவு ரயில் நிலையங்கள்
அதேபோல் ஏ பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்த சுத்தமான ரயில் நிலையங்கள்:
- மார்வார்
- புலேரா
- வாராங்கல்
- உதய்பூர்
- ஜெய்சால்மர்
- நிசாம்பாத்
- பார்மர்
- மஞ்சிர்யால்
- மைசூர்
- பில்வாரா ஆகியன சுத்தமான ரயில் நிலையங்களாகும்.
ஸ்வச் பாரத் எங்கே
அசுத்தமான ரயில்நிலையங்களின் பட்டியலில் நாகர்கோவில் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த ரயில் நிலையம் உள்ள தொகுதி கன்னியாகுமரி மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் தொகுதியாகும். இந்த நிலையில் இப்பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தாதது மக்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.