காஷ்மீர் தலைவர் கிலானிக்கும் "செனாய் மேதை" பிஸ்மில்லாகானுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிய நக்மா
ராம்பூர்: ஜம்மு காஷ்மீர் விடுதலை கோரும் பிரிவினைவாத இயக்கத் தலைவருக்கும் செனாய் இசை மேதை பிஸ்மில்லாகானுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசி நடிகை நக்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
லோக்சபா தேர்தல் களத்துக்கு காங்கிரஸ் சார்பில் நடிகை நக்மா வந்தது முதலே சர்ச்சைதான்.. ஒருவர் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.. ஒருவர் சில்மிஷம் செய்ய முயற்சித்ததால் அடிவாங்கினார் என்றுதான் நக்மா பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் இன்று ஊடகங்களில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வேட்புமனுவை முன்மொழிய செனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லாகான் குடும்பத்தினர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
சில நாட்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் விடுதலை கோரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானி, மோடியின் தூதர்கள் தம்மை சந்தித்தார்கள் என்று கூறியிருந்தார். இதனிடையே மோடியை ஆதரிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போகனும் என்று பாஜகவின் கிரிராஜ்சிங் கூறியிருந்தார்.
இந்த சம்பவங்களை குறிப்பிட்டுப் பேச முனைந்த, " மோடியின் வேட்புமனுவை முன்மொழிய மறுத்ததற்காக பாரத் ரத்னா கிலானியைக் கூடவா பாகிஸ்தானுக்கு போகச் சொல்வீர்கள்" என்று பேசினார்.
அதாவது செனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கானைக் குறிப்பிடுவதற்கு பதிலாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியை குறிப்பிட்டு நக்மா பேசப் போய் குழப்பமும் சர்ச்சையும் வெடித்திருக்கிறது.