பதவி போன ஒரே நாளில் மாற்றம்.. கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் பட்னாவிஸ்க்கு சம்மன்
Recommended Video
நாக்பூர்: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு எதிரான இரண்டு கிரிமினல் வழக்குகள் பற்றிய தகவல்களை மறைத்ததாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீது நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நாக்பூர் நீதிமன்றம் அளித்த சம்மனை காவல்துறையினர் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு வியாழக்கிழமை வழங்கினர்.
நாக்பூரில் உள்ள பட்னாவிஸ் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். . மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற ஒரு நாளில் சம்மன் வாங்கும் நிலை பட்னாவிஸ்க்கு உருவாகி உள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
கிரிமினல் வழக்குகள்
அப்போது. அவர் தாக்கல் வேட்புமனு பிரமாண பத்திரத்தில், கடந்த 1996 மற்றும் 1998ம் ஆண்டு மோசடி உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட இரண்டு கிரிமினல் வழக்குகளை மறைத்ததாக புகார் எழுந்தது.
வழக்குகள் தள்ளுபடி
இதையடுத்து தன் மீதான குற்ற வழக்குகுளை தேர்தல் பிரமாண பத்திரத்தில் மறைத்த ஃபட்னாவிஸுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரி நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் யுகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த வழக்கை கீழ் நீதிமன்றம் மற்றும் மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் அடுத்தது தள்ளுபடி செய்தன.
அக்டோபரில் உத்தரவு
இதை எதிர்த்து வழக்கறிஞர் சதீஷ் யுகே மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அப்போது முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் இந்த வழக்கை கீழ் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவேண்டும் என அக்டோபரில் உத்தரவிட்டது.
போலீஸ் வழங்கியது
இதையடுத்து நவம்பர் 1ம் தேதி வழக்கறிஞர் சதீஷ் யுகே தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நாக்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் 125 ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு (ஃபட்னாவிஸ்) நோட்டீஸ் வழங்கப்படுகிறது," என்று நீதிபதி எஸ் டி மேத்தா தெரிவித்தார்.