யாகூப் மேமன் தூக்கு விவகாரம்.. சட்ட அமைச்சகத்துடன் உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை
டெல்லி : மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமன் மனுவை தள்ளுபடி செய்து 3 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதையடுத்து, சட்ட அமைச்சகத்துடன் உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர் ஜூலை 30 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரும் யாகூப் மேமனின் நிவராண மனு, நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில்.ஆர்.தவே மற்றும் ஜோசப் குரியன் ஆகியோர் முன்னிலையான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு யாகூப் மேமன் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மாறுபட்ட நிலைப்பாட்டினால் இந்த வழக்கின் மீதான விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட பேரமர்வுக்கு மாற்றப்பட்டது. இதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.கோஷ், அமிதவராய் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கபட்டது.
யாகூப் மேமன் மனுவை இன்று விசரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று யாகூப் மேமன் தாக்கல் செய்த நிவாரண மனுவை தள்ளுபடி செய்ததது.
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் வித்யாசகர் ராவும் யாகூப் மேமனின் இறுதி நிமிட கருணை மனுவை நிராகரித்துள்ளதால், யாகூப் மேமன் நாளை தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து சட்ட அமைச்சகத்துடன் உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து மும்பை நாக்பூர் சிறை யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தயாராகி வருகிறது. மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட ஏற்பாடுகளை செய்த சிணை கண்காணிப்பாளர் யோகேஷ் தேசாய் தான் யாகூப் மேமனின் தூக்கு தண்டனைக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
பதற்றம் ஏற்படாமல் தடுக்க மும்பை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள போலீசார் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். நாக்பூரின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.