கொரோனா பதற்றத்தை தணிக்க.. படம் காட்டிய போலீசார்.. நெகிழ்ந்து போன பிரபல நடிகர்!
மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க, திறந்தவெளி திரையரங்கு அமைத்து போலீசார் திரைப்படம் திரையிட்டனர்.
நாக்பூர்: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க நாக்பூர் போலீசார் எடுத்துள்ள முயற்சி பாராட்டுகளை குவித்து வருகிறது.
Recommended Video
உலகையே ஆட்டம் காண வைத்திருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கோர தாண்டவமாடி வருகிறது. கொரோனா அதிகம் பாதித்த இந்திய மாநிலங்களில் மகாராஷ்ட்ரா தான் முதலிடத்தில் இருக்கிறது.
எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார்கள்.
நாக்பூர் போலீஸ்
அவர்களின் பதற்றத்தை போக்க நாக்பூர் போலீசார் சீறிய முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். மீம்ஸ் போடுவது, சேவைப்பணிகளில் ஈடுபடுவது என அவர்கள் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திறந்தவெளி திரையரங்கு
தற்போது நாக்பூரில் உள்ள ஒரு அரசு தங்குமிடத்தில், திறந்தவெளி திரையரங்கு அமைத்து மக்களுக்கு திரைப்படங்களை திரையிடும் பணிகளை போலீசார் செய்து வருகிறார்கள்.
முதல் படம்
முதல் படமாக அஜய் தேவ்கான், கஜோல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தானாஜி படத்தை திரையிட்டனர். இதனை தகுந்த சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து மக்கள் பார்த்து ரசித்தனர்.
பதற்றத்தை தணிக்க
"திரைப்படம் பார்ப்பதன் மூலம் மக்களின் கவனம் வேறுபக்கம் திரும்பும். மேலும் அவர்களின் பதற்றம் குறையும். எனவே தான் இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம்", என நாக்பூர் போலீஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
அஜய் தேவ்கன் மகிழ்ச்சி
நாக்பூர் போலீசின் இந்த முயற்சியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். முதல் படமாக தனது படம் திரையிடப்பட்டது குறித்து நடிகர் அஜய் தேவ்கன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.