அட போலீசா இப்படி ஜோக் அடிக்குது.. வைரலாகும், விக்ரம் லேண்டர் பற்றிய நாக்பூர் காவல்துறை ட்வீட்
நாக்பூர்: ஒவ்வொரு இந்தியனும் சந்திரயான் -2 லேண்டர் விக்ரமுடன், இஸ்ரோ தொடர்பு கொண்டுவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில் நாக்பூர் நகர காவல்துறை ட்விட்டர் வழியாக லேண்டர் விக்ரமுக்கு மிகவும் அழகான செய்தியை வெளியிட்டுள்ளது.
நாக்பூர் காவல்துறையினரின் ட்வீட்டில், இஸ்ரோவுக்கு சிக்னல் அனுப்புமாறு விக்ரமிடம் போலீசார் கேட்டுக்கொள்வதை போல செய்தி இடம் பெற்றுள்ளது. தற்போது, இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
|
அபராதம் போட மாட்டோம்
"சிக்னலை, பிரேக் செய்ததற்காக, காவல்துறையினர் உங்களுக்கு சலான் போடமாட்டார்கள், எனவே டியர் விக்ரம் பதிலளியுங்கள்" என்று ட்வீட் செய்துள்ளது, நாக்பூர் நகர காவல்துறை. இதைப்பார்த்த பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள் நாக்பூர் காவல்துறையின் நகைச்சுவை உணர்வைப் பாராட்டியுள்ளனர், இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த ட்வீட், 10,000க்கும் மேற்பட்ட மறு ட்வீட் மற்றும் 30,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது.
புதிய போக்குவரத்து விதிமுறைகள்
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பின்னர், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கடும் அபராதம் விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் ஒரே நபருக்கு ரூ .85,000 க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கூட அரங்கேறியுள்ளது.
நெட்டிசன்கள்
நாக்பூர் காவல்துதுறையினர், சொல்வது சரிதான்,. 133 கோடி இந்தியர்களின் நம்பிக்கை விக்ரமுடன் இணைக்கப்பட்டுள்ளன. நாக்பூர் போலீஸ் உங்கள் ட்வீட் சிறந்தது என்கிறார் ஒரு நெட்டிசன். மற்றொருவர், "நாக்பூர் காவல்துறையினர் கவலைப்படக்கூடாது" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
இஸ்ரோ கண்டுபிடிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) நிலவின் தென்துருவ மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள தரை நிலையத்துடனான தொடர்பை இழந்தபோது, நிலவு மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் லேண்டர் இருந்தது. இருப்பினும், நிலவு மேற்பரப்பில் லேண்டர் இருப்பதாக ஆர்பிட்டர் அனுப்பிய படத்தை வைத்து இஸ்ரோ கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.