சார்.. என் ஹார்ட்டை திருடிட்டாங்க.. வாங்கி தாங்க.. போலீசை அதிர வைத்த புகார்
திருடிய இதயத்தை கண்டுபிடித்து தரும்படி இளைஞர் போலீசில் புகார்
நாக்பூர்: "திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு காதலா" என்பது போய் இப்போது போலீசில் புகாரே கொடுக்கும் நிலை வந்துவிட்டது.
மனசு கொள்ளை கொண்டு விட்டாள், இதயத்தை திருடி விட்டாள் என்று சும்மா ஒரு பேருக்குதான் சொல்லி கொண்டிருந்தோம்.ஆனால் நாக்பூரை சேர்ந்த இந்த இளைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இதை நிஜமென நம்பி, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.
என்ன விஷயம் என்று போலீசார் விசாரிக்க, "என் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டாள். அதை கண்டுபிடித்து எனக்கு திருப்பி தாருங்கள்" என்று சொல்லி இருக்கிறார்.
கேஸ் போடணும்
இதைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர். இளைஞர் ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என்றுதான் முதலில் போலீசார் நினைத்தனர். ஆனால் வந்ததிலிருந்தே விடாப்பிடியாக இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்றே தொடர்ந்து சொல்லவும்தான், விஷயம் சீரியஸ் என புரிந்தது.
என்ன செய்வது?
அது மட்டும் இல்லை, உடனே இது சம்பந்தமாக கேஸ் புக் செய்யணும் என்றும் பிடிவாதம் பிடித்தார். இதனால் அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த போலீசார், உடனே உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, இப்படி ஒரு புகார் வந்திருக்கிறது, என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார்கள்.
திருப்பி அனுப்பினர்
இதை கேட்டு உயரதிகாரிகளும் ஷாக் ஆனார்கள். பிறகு, "இந்த புகாரை பதிவு செய்வதற்கு சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை, அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வும் இல்லை... அவரை திருப்பி அனுப்பி விடுங்கள்" என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதன்படியே அந்தஇளைஞருக்கு போலீசார் புத்தி சொல்லி ஒருவழியாக வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நொந்து கொண்ட போலீஸ்
இதை பற்றி போலீசார் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, புகார் சொன்னால், திருடிய பொருட்களை திருப்பி தருகிறோம், ஆனால் புகார் சொன்னாலும் திருப்பி தரவே முடியாத இப்படி ஒரு புகார் வந்தால் என்னா செய்வது? என்று நொந்து கொண்டார்கள்.