மும்பை தாக்குதலைப் போல நக்ரோட்டா சம்பவம் அவமானகரமானது.... சாடுகிறார் ப.சிதம்பரம்
மும்பை தாக்குதலைப் போல நக்ரோட்டா சம்பவமும் அவமானகரமானது என சாடியுள்ளார் சிதம்பரம்.
டெல்லி: மும்பை தாக்குதலைப் போல நக்ரோட்டா தாக்குதல் சம்பவமும் அவமானகராமனது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதிய "Choices:Inside the making of India's foreign policy" நூல் வெளியீட்டு விழாவில் சிதம்பரம் பேசியதாவது:
அவமானகரமானது...
நக்ரோட்டாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலைப் போல் அவமானகரமானது. இந்திய ராணுவம் எல்லை தாண்டி நடத்திய அதிரடித் தாக்குதலானது, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் இந்திய நிலைகளையும் முகாம்களையும் தாக்குவதைத் தடுக்கப் போவதில்லை.
பாகிஸ்தானுக்கு செய்தி..
ராணுவத்தின் தாக்குதலானது எல்லையில் சமநிலையை மீட்க உதவுகிறது. உங்களால் தாக்க முடிந்தால் எங்களாலும் தாக்க முடியும் என்ற செய்தியை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது.
எங்கள் ஆட்சியில்...
ஆனால், ராணுவத்தின் அதிரடித் தாக்குதலால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விடும் என்ற வாதம் தவறு என்பதை நக்ரோடா தாக்குதல் நிரூபித்துள்ளது. முன்பு உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலாளர், சிறப்புச் செயலாளர், உளவுத்துறையின் (ஐபி) இயக்குநர், ரா உளவு அமைப்பின் தலைவர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் தினமும் சந்திப்பது என்ற நல்ல நடைமுறை வழக்கத்தில் இருந்தது.
ஒருங்கிணைப்பு இல்லை
அந்த நடைமுறை நிறுத்தப்பட்டதால் மத்திய உள்துறை அமைச்சக நிலையில் ஒற்றுமையின்மை, ஒருங்கிணைப்பு இல்லாமை, ஒருமித்த கட்டளை அமைப்பு இல்லாமை இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தில், தற்போதைய மத்திய அரசு முதலில் ஒருவித தீவிரத்தைக் காட்டியது. தற்போது மற்றொரு விதமான தீவிரத்தைக் காட்டுகிறது. முதலில் அதீத ஆர்வத்துடன் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தியது. தற்போது அதிரடித் தாக்குதல் போன்றவற்றை நம்புகிறது.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.