தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- ஜெகன் சாகும் வரை உண்ணாவிரதம்!
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கியுள்ளார்.
இன்று காலை ஹைதராபாத்தில் ஜெகன் தமது வீட்டில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
பலத்த பாதுகாப்பு
அவருக்கு எதிராக தெலுங்கானா ஆதரவாளர்கள் பதில் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மோடி மாற்றுவார்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன், நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுமே மதச்சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியும் மாற வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை நரேந்திர மோடி மாற்ற வேண்டும்.
அவசர சட்டத்தைப் போல..
தண்டனை பெற்ற எம்.பி. எல்.ஏக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டத்தை திரும்பப் பெற்றதைப் போல தெலுங்கானாவுக்கான ஒப்புதல் அறிவிப்பையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
சந்திரபாபுவும் உண்ணாவிரதம்
இதனிடையே தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 7-ந் தேதி முதல் டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
எல்லாமே நாடகம்
இந்நிலையில் ஜெகன் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதம் பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், இருவருமே தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளனர். இருவரும் இப்போது உண்ணாவிரதம் இருப்பது என்பது முழுமையான அரசியல் சந்தர்ப்பவாதம் என்றார்.