சந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி.. மீண்டு வரவே முடியாது.. விட மாட்டோம்.. பாஜக சாபம்!
விஜயவாடா: எப்போது பார்த்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசியே வந்தார் சந்திரபாபு நாயுடு. தனது அரசின் சாதனைகளைக் கூடச் சொல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் கொடுத்திருப்பது மரண அடி.. மீண்டு வரவே முடியாத அடி இது என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.
விஜயவாடாவுக்கு வந்திருந்த முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான சிவராஜ் சிங் செளகான்தான் இப்படி கோபாவேசமாக பேசியுள்ளார்.
காங்கிரஸுக்குக் கிடைத்த அடியைப் போல மிக பலத்த அடி தெலுங்கு தேசம் கட்சிக்கும் கிடைக்கும். அதிலிருந்து நாயுடுவால் மீண்டு வரவே முடியாது என்றும் அவர் சாபம் விட்டுள்ளார்.
கருணாநிதி மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுகவின் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் நிச்சயதார்த்தம்
கூடாரம் காலியாகும்
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் காலாவதியாகி விடும். காலிக் கூடாரமாகி விடும். காங்கிரஸுக்குக் கிடைத்த அதே அடிதான் தெலுங்கு தேசம் கட்சிக்கும் கிடைக்கும். மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டார் நாயுடு. ஆனால் சொந்த மண்ணிலேயே அவரால் மீண்டு வர முடியாத அளவுக்கு அடி விழுந்துள்ளது.
மோடியை திட்டினால் இப்படித்தான்
எப்போது பார்த்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்தபடியே இருந்தார் நாயுடு. ஆனால் தேர்தல் சமயத்தில் தனது அரசின் ஒரு சாதனையைக் கூட மக்களிடம் அவரால் சொல்ல முடியவில்லை. அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்பதே உண்மை.
சுருட்டி விட்டார்கள்
மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு தொகுப்பாக பெருமளவில் நிதி அளித்தது. ஆனால் அதை நாயுடு அரசு தவறாக பயன்படுத்தியது. தெலுங்கு தேசம் தலைவர்களே அதை சாப்பிட்டு விட்டனர்.
ராகுல் காந்தி ஓடி விட்டார்
காங்கிரஸ் கட்சி சீர்குலைந்து விட்டது. அதன் தலைவர் ராகுல் காந்தியே அதைத் தாங்க முடியாமல் ஓடி விட்டார். இதே நிலைதான் நாயுடுவுக்கும் ஏற்படும். இதை விட மோசமான விளைவை நாயுடு சந்திப்பார். பூஜ்யத்திலிருந்து வளர்ந்து ஆட்சியைப் பிடித்த கட்சி பாஜக. ஆந்திராவிலும் அடிமட்டத்திலிருந்து எழுந்து விஸ்வரூபம் எடுத்து ஆட்சியைப் பிடிப்போம் என்றார் செளகான்.
கடும் தாக்கு
சந்திரபாபு நாயுடுவை செளகான் மிகக் கடுமையாக சாபம் விடுவது போல விமர்சித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எந்த அளவுக்கு படு தீவிரமாக இயங்கி வருகிறது என்பதையும் இது காட்டுவதாக உள்ளது.