கடிதம் கிடைத்தது, தேவையான நடவடிக்கை எடுப்போம்- ஓ.பி.எஸ்சுக்கு நாயுடு பதில்
ஹைதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திர மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு, ஆந்திரா ஹைகோர்ட், தமிழக அரசு மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி இருக்கிறது.
20 தமிழர்களும் பிடித்து வைத்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்து வருகிறது. இதன் காரணமாக சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு சரிந்தபடி உள்ளது.
இணையதளங்களில் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக நிறைய கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் இன்று ஆந்திர உயர்நீதிமன்றமும் கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு மிகவும் கவலை அடைந்துள்ளார்.
நேற்று அவர் மாநில அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எத்தகைய பதில் அனுப்புவது என்று அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு விசாரித்தார்.
அதில் செம்மரம் வெட்ட தமிழர்கள் ஊடுருவிய படக்காட்சிகளை ஆதாரமாக வைத்து உரிய பதில் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. செம்மரக் கடத்தல்காரர்களுடன் துப்பாக்கி சண்டை நடந்ததை போலீஸ்காரர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளாராம். அந்த காட்சிகளையும் ஆதாரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் சந்தேகம் இருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். இது தொடர்பாக தேவையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடுக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்திற்கு தற்போது நாயுடு பதில் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
7.4.2015 அன்று நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், ஸ்ரீவாரிமெட்டு, ஈசங்குடி பகுதிகளில் நடந்த சம்பவம் குறித்த உங்களது கவலையைத் தெரிவித்திருந்தீர்கள்.
அதில், 20 தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி நியாயமான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தீர்கள். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நடந்த சம்பவம் தொடர்பான அனைத்து உண்மைத் தகவல்களும் விசாரணைக் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் முறைப்படி வழங்கப்பட்டு விட்டது.
இந்த சம்பவம், ஆந்திர போலீசார் நடத்தியது போலி என்கவுன்டர் என்பது தெரிய வந்தால், அது குறித்து நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதியுள்ளார்.
தமிழக அரசை சமரசம் செய்யும் வகையில் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு அளித்துள்ள விளக்கத்தை போன்றே மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் விளக்கம் அளிக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.