சாரதா நிதி நிறுவன மோசடி.. நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
நளினி சிதம்பரம் ரூ.1.4 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாவது: சாரதா குரூப் தலைவர் சுதிப்தா சென்னுடன் சேர்ந்து, நிதி நிறுவன பணத்தை கையாடல் செய்து ஏமாற்ற, நளினி சிதம்பரம் உடந்தையாக இருந்துள்ளார். இதற்காக 2010 முதல் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் நளினி சிதம்பரம் ரூ.1.4 கோடி பணம் பெற்றுள்ளார். இவ்வாறு சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இது 6வது, துணை குற்றப்பத்திரிக்கையாகும். இந்த குற்றப்பத்திரிகையில்தான், நளினி சிதம்பரம் பெயர் இடம் பெற்றுள்ளது. அனுபூதி பிரிண்டர்ஸ் மற்றும் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டட் மற்றும் சுதிப்தா சென் ஆகியோர் சக குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
சாரதா நிதி மோசடி என்றால் என்ன?:
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது சாரதா நிதி நிறுவனம். இந்த நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்தது. இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார்.
ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.