சிட் பண்ட் மோசடி வழக்கில் ப.சிதம்பரம் மனைவி நளினிக்கு நோட்டீசா? சிபிஐ மறுப்பு
டெல்லி: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி வழக்கறிஞர் நளினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியான தகவல்களை சிபிஐ மறுத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை மையமாக கொண்டு சுதீப்தா சென் என்பவர் நடத்திய சாரதா சிட் பண்ட் நிறுவனம் பொது மக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை வசூலித்தது. ஆனால் இந்த பணத்தை பொதுமக்களுக்கு திருப்பி தராமல் ஏமாற்றியதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.
இம்மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த மோசடி வழக்கில் மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் சிக்கியுள்ளனர்.
இவ்வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 6வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் நளினி சிதம்பரம், குற்றவாளியாகவோ அல்லது சாட்சியாகவோ சேர்க்கப்படவில்லை. இவ்வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் மூத்த தலைவரான மனோரஞ்சனா சிங் சார்பில் சாரதா சிட் பண்ட் நிறுவனர் சுதீப்தா சென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் நளினி சிதம்பரம்.
டிவி சேனல் ஒன்றை மனோரஞ்சனா சிங் தொடங்க உள்ளதாகவும் அதற்காக சுதீப்தா சென் கடன் கொடுத்ததாகவும் கூறப்படும் விவகாரத்தில் மனோரஞ்சனா சிங்கின் வழக்கறிஞராக இருந்தவர் நளினி சிதம்பரம். இவருக்கான வழக்கறிஞர் கட்டணமாக ரூ1 கோடி வரை செலுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் இந்த பணப் பரிவர்த்தனையில் நளினி சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது என அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 10-ந் தேதியன்று இவ்வழக்கின் விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதை சிபிஐ தலைமை அலுவலகம் இன்று மறுத்துள்ளது.